‘‘நீயா, நானான்னு இலை கட்சியில போட்டி நடக்குதாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘கிரிவலம் மாவட்டத்துல கடந்த சில மாசத்துக்கு முன்னாடி மத்திய மாவட்டத்தை புதுசா உருவாக்கி, பெண் ஒருவருக்கு பதவியும் வழங்குனாங்க. அவங்க அடைமொழி பெயரை கொண்ட மாஜி மந்திரியை கண்டுக்குறதே இல்லையாம். போ என்று தொடங்குற அந்த தொகுதி நிகழ்ச்சியில மாஜி மந்திரி கலந்துகிட்டா, அந்த நிகழ்ச்சிக்கே போறதில்லையாம். இவரும் அந்தம்மா கலந்துக்குற நிகழ்ச்சிக்கு போறதில்லையாம். இப்படி நீயா, நானான்னு இலை கட்சியில போட்டி நடக்குதாம். அதோட, ஊர் பெயரை அடைமொழியாகக் கொண்டவரையும் கண்டுக்குறதில்லையாம். இப்படி இலைகட்சியில கோஷ்டி பூசல் அதிகரிச்சு இருக்குதாம். இதற்கிடையிலத்தான், ஆறு அணி தொகுதிக்கு இலை கட்சியில இருந்தே ஒருத்தர் வேட்பாளராக நிற்க தயாராகிட்டாராம். அதுக்காக கட்சி தலைமைக்கு கொடுக்க வேண்டியதையும் கொடுத்துட்டாராம். இப்ப, கட்சியில நடக்குற கோஷ்டி பூசலை பார்த்து பயந்து போய் இருக்காராம். இவங்களுக்குள்ள நடக்குற சண்டையில, வேட்பாளரை கரைசேர விடாம செஞ்சிடுவாங்களோன்னு, அந்த தொகுதி இலைகட்சிக்காரங்களே பேசிக்கிறாங்க..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘தொடங்கிய பணிக்கு மோடி அடிக்கல் நாட்டியதா சொல்றாங்களே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் பல்வேறு ரயில்வே திட்டங்களுக்கு நேற்று திறப்பு விழா, அடிக்கல் நாட்டு விழா, நாட்டுக்கு அர்ப்பணித்தல் என்று விழா ஒன்றை காணொலி காட்சி வாயிலாக நடத்தியிருந்தார். இந்த திட்டத்தில் கடைகோடி மாவட்டமான கன்னியாகுமரியில் நாகர்கோவில் அருகே ஊட்டுவாழ்மடம் என்ற இடத்தில் சுரங்கபாதை ஒன்றும் அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால் இந்த சுரங்கப்பாதை (சப்வே) பணிகள் ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டு விட்டது. பாதி நிறைவு பெற்றுள்ளது. மீதி பகுதியில் கம்பி கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் தொடங்கி நடந்து கொண்டிருக்கின்ற சுரங்கப்பாதைக்கு திடீரென்று அடிக்கல் நாட்டுவிழா நடத்தி அதற்கு பொன்னானவரும் சென்று குத்துவிளக்கேற்றிவிட்டு வந்தாராம். எல்லாம் தேர்தல் படுத்தும்பாடு’’ என்றார் விக்கியானந்தா.
‘‘கூட்டத்தில் வேட்பாளரை அறிமுகப்படுத்திய மாஜி அமைச்சர் மீது அதிருப்தியில் நிர்வாகிகள் இருப்பதாக சேதி வருதே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘தாமரையுடன் ஏற்பட்ட திடீர் விரிசலால் கூட்டணியில் இருந்து தனியாக பிரிந்து வந்த சேலத்துக்காரர் நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திப்பது, எந்தெந்த தொகுதியில் வேட்பாளர்களை நிறுத்துவது என எந்தவித முடிவு எடுக்காமல் இருந்து வருகிறார். இதனால் டெல்டா மாவட்டத்தில் உள்ள மாஜி அமைச்சர்கள் தேர்தல் பணியை தொடங்காமல் இருந்து வருவதால் நிர்வாகிகள், தொண்டர்கள் சோர்ந்து போய் உள்ளனர். ஆனால் கடலோர மாவட்டத்தில் மாஜி அமைச்சர் ‘மணியானவர்’ தேர்தல் பணியை தொடங்கி விட்டாராம்…
கடலோர மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் நடந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கூட நாடாளுமன்ற தேர்தலில் கடலோர தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்த தனது ஆதரவாளரை ‘மணியானவர்’ நேரில் அழைத்து வந்து இவர் தான் கடலோர தொகுதி வேட்பாளர் என கட்சியினருக்கு அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதில் அதிர்ச்சிக்குள்ளான நிர்வாகிகள் இதுவரை கூட்டணி குறித்தோ, தொகுதி பங்கீடு குறித்தோ எந்தவித முடிவு எடுக்கப்படவில்லை. அதற்குள் ‘மணியானவர்’ அவரது ஆதரவாளர் தான் வேட்பாளர் என அறிமுகம் செய்து வைக்கிறாரே என நிர்வாகிகள் புலம்புகிறார்களாம். இவர் தான் வேட்பாளர் என அறிவித்து விட்டால், மேலிடம் மாற்ற வாய்ப்பில்லை என்பதால் மணியானவர் இப்படி செய்கிறாரா என அவர் மீது அதிருப்தியில் நிர்வாகிகள் இருக்காங்களாம்’’ என்றார்
‘‘சைக்கிள் வேற பக்கம் போனதுல சேலத்துக்காரர் அப்செட்டாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘சைக்கிள் காரரு எப்படியும் இலையின் பக்கம் தான் இருப்பாரு என்பது முக்கிய நிர்வாகிகளின் எண்ணமாக இருந்ததாம். அதே நேரத்தில் தாமரையின் பக்கம் அதிரடியாக சாய்வாரு என்பதை அவரது சொந்தக்கட்சிக்காரங்களே சற்றும் எதிர்பார்க்கலையாம். இது அந்தக்கட்சியின் மாநில நிர்வாகிகள் பலரை ஜெர்க் ஆக்கிடுச்சாம். அவருக்கு எம்பி பதவியை ஒதுக்கிக் கொடுத்ததே இலைக்கட்சி தானாம். அந்த நன்றிக்காகவே சைக்கிள்காரரு, இலையோடுதான் கூட்டணியில் இருப்பாரு என்று சத்தியம் செஞ்சிட்டு இருந்தாங்க. அதனால் தாமரையோடு அவரு கூட்டணி போட்டதை அவர்களால் ஜீரணிக்கவே முடியலையாம். இதுக்கு மத்தியில் தான் சேலத்துக்காரரின் இல்லத்துக்கு வந்தாராம் சைக்கிள்காரரின் மாநில இளைஞரணி லீடரு. விஷயம் அரசல்புரசலாகவே தனிப்பட்ட முறையில் தேங்க்ஸ் சொல்ல வந்தேன் என்று ஒரு அறிவிப்பை தட்டிவிட்டாராம். இது ஒரு புறமிருக்க, மஞ்சளுக்கு பேமசான ஊரில் இலையின் வேட்பாளராக சைக்கிளின் இளைஞரணி தலைவரு நிற்கப்ேபாறாரு. இதற்கு அச்சாரம் போடத்தான் அவுரு வந்திருக்காரு. சேலத்துக்காரரு அடுத்தடுத்து எடுக்கப்போற மூவ்மென்ட்டுகளை பொறுத்திருந்து பாருங்க என்று மூத்த நிர்வாகிகள் காதோடு கிசுகிசுத்த நிகழ்வுகளும் இந்த சந்திப்பின் போது நடந்துச்சாம்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘போஸ்டரால பெரிய சர்ச்சை ஆயிருச்சு போல…’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பாஜவை அதன் கொள்கையுடன் ஒத்துப்போகும் இந்து முன்னணி கடுமையாக விமர்சித்துள்ளது. நெல்லையில் தான் இந்தக் கூத்து. பிரதமர் மோடி தேசிய கட்சியின் பொதுக்கூட்டத்திற்காக நாளை அல்வா மாநகருக்கு வருகிறார். நெல்லை என்றாலே நெல்லையப்பர் தான். நெல்லை என்ற பெயர் வருவதற்கே காரணம் அந்த சுவாமி நெல்லையப்பர் தான். இதனால் நெல்லை வரும் பிரதமர் மோடியை ‘நெல்லையப்பர்’ போன்று வர்ணித்து தேசிய கட்சியினர் நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டிவிட்டனர். என்ன தான் பிரதமர் என்றாலும், நெல்லை மக்களின் தெய்வீக தெய்வமாக வழிபாடும் நெல்லையப்பர் போன்று வர்ணித்தால், சும்மா விடுவார்களா நெல்லை மக்கள். பாஜவின் கொள்கை, சித்தாந்தத்தில் ஒன்றிப் போன இந்து முன்னணி கூட இதை பொறுத்துக் கொள்ளவில்லை. இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் நெல்லையப்பரோடு ஒப்பிட்டு சுவரொட்டியா என அதிர்ந்து போய் கண்டனத்தையும் பதிவு செய்துள்ளது. இந்த போஸ்டர்களை உடனே அகற்றி விட்டு தேசிய கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளது. என்ன நடவடிக்கை பாயுமோ.. எல்லாம் தேசிய கட்சியினருக்கே வெளிச்சம்’’ என்றார் விக்கியானந்தா.