நன்றி குங்குமம் தோழி
சாதாரண நடுத்தர குடும்பத்துப் பெண்ணாகப் பிறந்த கேட் மிடில்டன், ராயல் பிளட்டில் பிறந்து வளர்ந்த இளவரசர் வில்லியம்மைக் காதலித்துக் கரம் பிடித்தவர்.இளவரசரைக் கரம் பிடித்ததால் “பிரின்செஸ் ஆஃப் வேல்ஸ்” என்கிற பட்டத்துடன் லண்டன் ராயல் அரண்மனையின் மூத்த மருமகளாய் நுழைந்தவர். கேட்-வில்லியம்ஸ் காதல் தம்பதி மகிழ்ச்சியாக உலகை வலம் வந்தனர். இந்தத் தம்பதியருக்கு மூன்று குழந்தைகள்.
யாரும் எதிர்பாராமல் காணொளி ஒன்றை மிகச் சமீபத்தில் வெளியிட்ட பிரிட்டன் இளவரசி கேட் மிடில்டன், தனக்கு புற்றுநோய் இருப்பதாக அதில் தெரிவித்து, அதற்காக கீமோதெரபி சிகிச்சையில் தான் இருப்பதாகவும் நீண்ட விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.ஜனவரி மாதமே மருத்துவமனையில் இரண்டு வார காலம் தான் சிகிச்சையில் இருந்ததாகவும், அப்போது வயிற்றில் புற்றுநோய் முதல் கட்ட நிலையில் இருப்பது உறுதியானது என்றும் தெரிவித்த கேட், குடும்ப நலன் கருதி இதை வெளிப்படையாகத் தெரிவிக்கவில்லை எனவும், கீமோதெரபி சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என மருத்துவக் குழுவினர் அறிவுறுத்தி இருப்பதால், தற்போது ஆரம்ப கட்ட சிகிச்சையில் இருக்கிறேன் எனவும் அந்தக் காணொளியில் தெரிவித்திருக்கிறார்.
மனதளவிலும், உடல் அளவிலும் என்னை வலுப்படுத்தும் முயற்சிகளை தற்போது மேற்கொண்டு வருகிறேன் என்றவர், புற்றுநோயிலிருந்து மீண்டுவர உதவும் விஷயங்களிலும் தான் கவனம் செலுத்தி வருகிறேன் என்றார்.எங்களின் பிள்ளைகளிடத்திலும் என் நிலை குறித்து புரியும் விதத்தில் நாங்கள் எடுத்துச் சொல்லி இருக்கிறோம் எனக் கேட் மிடில்டன் காணொளியில் சொல்லும்போதே இந்தச் செய்தி நமக்கும் ரொம்பவே வருத்தமாக இருந்தது.
ராயல் ஃபேமிலியோ… சாதாரண குடும்பமோ… இந்த அன்பான மிகவும் அழகான குடும்பத்திற்கு ஏன் இப்படி ஒரு நிலை என்றே நினைக்கத் தோன்றுகிறது.பிரின்செஸ் ஆஃப் வேல்ஸ் விரைவில் புற்றுநோயில் இருந்து மீண்டுவர வேண்டும் என்பதே பிரபலங்கள் பலரின் பதிவாகவும் சமூக ஊடகங்களில் இருக்கிறது.
தொகுப்பு: மணிமகள்