சென்னை: திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றியதாக நடிகை விஜயலட்சுமி, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக கடந்த 2011ல் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில், தனக்கு எதிராக பதியப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சீமான் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு கடந்தமுறை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்த போது, காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை ரத்து செய்வது தொடர்பாக விளக்கம் பெறுவதற்காக நடிகை விஜயலட்சுமி கடந்த ஆண்டு செப்டம்பர் 29ல் ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்பிறகு வழக்கு பட்டியலிடப்படவில்லை. இந்த நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், மார்ச் 19ம் தேதி மதியம் நடிகை விஜயலட்சுமி நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.