சென்னை: பைபாஸ் அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது என்று காவேரி மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதய அறுவை சிகிச்சை நிபுணர் ரகுராமன் தலைமையிலான மருத்துவர்கள் குழு செந்தில்பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு அதிகாலை 5.15 மணியளவில் இதய அறுவை சிகிச்சை தொடங்கிய நிலையில் தற்போது சிகிச்சை நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜி உடல்நிலை தொடர்பான மருத்துவ அறிக்கையை காவேரி மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதில், புதிய ரத்த நாளம் மூலம் இருதய தமணியில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டது. இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த 4 அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. அறுவை சிகிச்சையில் அமைச்சருக்கு 4 பைபாஸ் கிராஃப்ட்ஸ் வைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜி தற்போது, சிறப்பு இருதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சரின் உடல்நிலை மருத்துவக் குழுவால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.