ஊத்துக்கோட்டை: வெயிலின் தாக்கத்தை தணிக்க ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் தினமும் 1000 பேருக்கு மோர் மற்றும் ஓஆர்எஸ் பவுடர் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதையொட்டி ஊத்துக்கோட்டை பேரூராட்சி சார்பில் பேருந்து நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பொதுமக்களுக்கு மோர் மற்றும் ஓஆர்எஸ் பவுடர் தண்ணீரில் கலந்து வழங்க வேண்டும் என திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர், பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெயக்குமார் ஆகியோர் உத்தரவிட்டனர்.
அதன்பேரில் ஊத்துக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சதீஷ் தலைமையில் தலைமை எழுத்தர் பங்கஜம், தூய்மை பணி மேற்பார்வையாளர் செலபதி, சமூக ஆர்வலர் திலீப் ஆகியோர் முன்னிலையில் நேற்று பஸ் நிலையத்தில் 1000 பேருக்கு மோர் வழங்கப்பட்டது. இதுகுறித்து செயல் அலுவலர் கூறும்போது, கலெக்டர் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் உத்தரவின் பேரில் மோர் வழங்கப்பட்டது. நாளை ஓஆர்எஸ் பவுடர் வழங்கப்படும். இதுபோன்று தினமும் 1000 பேருக்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார். இதில் பேரூராட்சி ஊழியர்கள் வெங்கடேசன், முனிசந்திர சேகர், குமார், சீனிவாசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.