Thursday, May 9, 2024
Home » சிறு வணிகர்களுக்கான வணிக வரி சமாதான திட்டம் அறிமுகம் ரூ. 50,000 வரை வரி பாக்கி தள்ளுபடி: தமிழக வரலாற்றில் முதல்முறையாக நடைமுறை 95,502 பேர் பலன் பெறுவார்கள்

சிறு வணிகர்களுக்கான வணிக வரி சமாதான திட்டம் அறிமுகம் ரூ. 50,000 வரை வரி பாக்கி தள்ளுபடி: தமிழக வரலாற்றில் முதல்முறையாக நடைமுறை 95,502 பேர் பலன் பெறுவார்கள்

by Dhanush Kumar

* முதல்வர் மு.க.ஸ்டாலின் பேரவையில் அறிவிப்பு

சென்னை: சிறு வணிகர்கள் பயன்படக்கூடிய வகையில் சமாதான திட்டத்தை சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். ரூ. 50 ஆயிரத்திற்கும் குறைவான வரி, வட்டி, அபராத தொகை முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவைத் தொகை தொடர்பாக 2 லட்சத்து 11 ஆயிரத்து 607 கேட்பு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவற்றில் சம்பந்தப்பட்ட வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 42 ஆயிரத்து 569. இவற்றில் நிலுவையாக உள்ள தொகை 25 ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவ்வாறு மிக அதிக எண்ணிக்கையில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால், வணிகவரித் துறையின் பணிச்சுமை அதிகரிப்பதோடு, வணிகர்களும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். தமிழ்நாடு அரசுக்கு வரவேண்டிய வருவாயும் பெருமளவில் நிலுவையாக உள்ளது.

இவற்றில் பெரும்பான்மையான வழக்குகள் தமிழ்நாடு வணிக வரிச் சட்டம் மற்றும் தமிழ்நாடு மதிப்புக் கூட்டு வரிச் சட்டம் ஆகியவற்றின் கீழ் நிலுவையில் உள்ள வழக்குகள். மேற்கூறிய இரு முக்கிய சட்டங்கள் மற்றும் பல இதர சட்டங்களையும் உள்ளடக்கி, கடந்த 1-7-2017 முதல் நாடு முழுமைக்கும் ஜி.எஸ்.டி. சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு தற்போது நடைமுறையில் இருந்து வருகிறது. இருந்தாலும், ஏற்கனவே வழக்கத்திலிருந்த இந்த வரிச்சட்டங்களின் கீழ் அரசுக்கு செலுத்தப்பட வேண்டிய வரி, அதன் மீதான வட்டி மற்றும் அபராதம் ஆகியன இன்னமும் பல வணிகர்களின் பெயரில் நிலுவையில் இருந்து வருகின்றன. இந்த நிலுவைத் தொகையை திருப்பி செலுத்துவதில் சலுகைகள் வழங்கப்பட்டு, இந்த பிரச்னைகளுக்கு முடிவு காணப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வணிகர்கள் நீண்ட நாட்களாக முன்வைத்து வருகிறார்கள். இந்த கோரிக்கைகளை கவனமுடன் பரிசீலித்து, இத்தகைய பழைய நிலுவைத் தொகைகளை வசூலிப்பதில் ஒரு சமாதானத் திட்டத்தை அறிவித்துச் செயல்படுத்திட இந்த அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டுகளில் இந்த நிலுவைத் தொகைகள் குறித்து பல சமாதான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருந்தாலும், புதியதோர் அணுகுமுறையோடும் கூடுதல் சலுகைகளோடும் இந்த திட்டம் இப்போது வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், வரி மதிப்பீட்டு ஆண்டில் ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு குறைவாக வரி, வட்டி, அபராதத் தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு இந்நிலுவை தொகையானது முற்றிலுமாக தள்ளுபடி செய்யப்படும். ஒவ்வொரு வரி மதிப்பீட்டு ஆண்டிலும் ரூபாய் ஐம்பதாயிரத்திற்கு உட்பட்ட நிலுவை இனங்களுக்கு வரி செலுத்துவதிலிருந்து முழு விலக்கு அளிக்கப்படும். தமிழ்நாட்டின் வரலாற்றில் சிறு வணிகர்களுக்கு இவ்வாறு முழுமையாக வரி நிலுவை தள்ளுபடி செய்யப்படுவது இதுதான் முதல்முறை. அரசின் இந்த முடிவால் ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 398 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ள 95 ஆயிரத்து 502 சிறு வணிகர்கள் தமது நிலுவைத் தொகை முழுமையாக தள்ளுபடி செய்யப்பட்டு பலனடைவார்கள்.

இப்படி நிலுவைத் தொகை தள்ளுபடி செய்யப்பட்ட வணிகர்கள் தவிர இதர வணிகர்கள் மற்றும் நிறுவனங்கள் அனைவரும், -ரூபாய் ஐம்பதாயிரம் முதல் 10 லட்சம் வரை நிலுவையில் உள்ளவர்கள்,- ரூபாய் பத்து லட்சம் முதல் ஒரு கோடி வரை வரி நிலுவையில் உள்ளவர்கள், ரூபாய் ஒரு கோடி முதல் 10 கோடி வரை நிலுவையில் உள்ளவர்கள், ரூபாய் 10 கோடிக்கு மேலாக நிலுவையில் உள்ளவர்கள் என நான்கு வரம்புகளின் கீழ் கொண்டு வரப்படுவர். இந்த நான்கு வரம்புகளில் முதல் வரம்பில் உள்ளவர்கள் மொத்த நிலுவை தொகையில் 20 விழுக்காட்டைக் கட்டி நிலுவை வழக்குகளில் இருந்து வெளிவரலாம். அல்லது நிலுவையில் உள்ள வணிகவரி, வட்டி மற்றும் அபராத தொகையில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டு தொகையைக் கட்டி நிலுவை வழக்குகளில் இருந்து வெளி வரலாம். இதர மூன்று வரம்புகளில் உள்ள வணிகப் பெருமக்களும், நிலுவையில் உள்ள வணிக வரி, வட்டி மற்றும் அபராதத் தொகையில் குறிப்பிட்ட விழுக்காட்டைக் கட்டினால் நிலுவை வழக்குகளில் இருந்து வெளிவரும் வகையில் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இவர்களுள், வரி விதிப்பை ஏற்றுக் கொண்டிருப்பவர்களும், வரி விதிப்பை ஏற்றுக் கொள்ளாமல் மேல்முறையீடு செய்து இருப்பவர்களுக்கும் என தனித்தனியாக நடைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த திட்டத்தின் மேலும் ஒரு முக்கியச் சலுகையாக, நிலுவைத் தொகையை வணிகர்கள் கட்ட முன்வரும் நாள் வரை அவர்களது கணக்கில் ஏற்றப்பட ஏதுவான திரண்ட வட்டி தொகையும் முழுவதுமாகத் தள்ளுபடி செய்யப்படும்.

தமிழ்நாட்டின் வணிகப் பெருமக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பை நிறைவு செய்யும் வகையில் செயல்படுத்தப்பட இருக்கும் இந்த திட்டம் வரும் 16ம் தேதி நடைமுறைக்கு வரும். நான்கு மாத காலம் நடைமுறையில் இருக்கும். அதாவது 2024 பிப்ரவரி 15ம் தேதி வரை இந்த சமாதானத் திட்டம் நடைமுறையில் இருக்கும். அரசின் இத்தகைய முன்னோடி முயற்சியை முழுமையாக வணிகர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு தீர்வு காண்பதோடு, தமிழ்நாடு அரசுக்கு சேர வேண்டிய வருவாயையும் அளித்து, வணிகப் பெருமக்கள் மென்மேலும் தொழில் வளர்த்து வளம் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலினின் இந்த அறிவிப்புக்கு அமைச்சர் பி.மூர்த்தி, செல்வபெருந்தகை (காங்கிரஸ்), ஜி.கே.மணி (பாமக), எஸ்.எஸ்.பாலாஜி (விசிக), நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), டி.ராமசந்திரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக்குமார் (மதிமுக) ஜவாஹிருல்லா (மமக), ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி) உள்ளிட்டோர் பாராட்டி பேசினர்.

* தமிழ்நாடு அரசுக்கு வணிகர்கள் செலுத்த வேண்டிய வரி நிலுவை தொடர்பாக உள்ள வழக்குகள் 2,11,607.

* இவற்றில் சம்பந்தப்பட்ட வணிகர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் எண்ணிக்கை 1,42,569.

* சமாதான திட்டத்தின் கீழ், மதிப்பீட்டு ஆண்டில் ரூ. 50,000க்கு வரி, வட்டி, அபராதத் தொகை செலுத்த வேண்டிய வணிகர்களுக்கு நிலுவை தொகை முற்றிலும் தள்ளுபடி செய்யப்படும்.

* தமிழக வரலாற்றில் சிறு வணிகர்களுக்கு முழுமையாக வரி நிலுவை தள்ளுபடி செய்யப்படுவது இதுதான் முதல்முறை.

* அரசின் முடிவால் 40,398 வழக்குகளில் தொடர்புடைய 95,502 சிறு வணிகர்கள் பலன் அடைவார்கள்.

You may also like

Leave a Comment

2 × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi