தாம்பரம்: மேற்கு தாம்பரம், மாந்தோப்பு, மீனாம்பாள் தெருவை சேர்ந்தவர் பிரியா. இவரது வீட்டில் பிரியாவின் மகன் விஷால் மற்றும் பிரியாவின் தாய் பத்மா, பிரியாவின் கணவர் வக்கீல் தியாகராஜன் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை பிரியா, விஷால் மற்றும் பிரியாவின் தாய் பத்மா ஆகிய மூன்று பேரும் வீட்டில் இருந்தபோது வீட்டின் உள்பகுதியில் இருந்த கண்ணாடி திடீரென உடைந்து விழுந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கண்ணாடி விழுந்த இடத்தில் பார்த்தபோது அங்கு துப்பாக்கி குண்டு கிடந்ததை கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து அவர்கள் உடனடியாக தாம்பரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர். மேலும் தடய அறிவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கு கிடந்த துப்பாக்கி குண்டை பறிமுதல் செய்து துப்பாக்கி குண்டு எந்த வகையை சேர்ந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில், துப்பாக்கி குண்டு சுமார் ஒரு கி.மீ. தூரத்திலிருந்து வந்து விழுந்திருக்கலாம் எனவும், யாராவது தவறுதலாக துப்பாக்கியால் சுட்டார்களா என்பது குறித்தும் தாம்பரம் மாநகர காவல் துணை ஆணையர் பவன்குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வக்கீல் வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.