Tuesday, April 30, 2024
Home » அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கில் சாட்சி கூறிய அண்ணன் வெட்டி படுகொலை தம்பி கவலைக்கிடம்: மர்ம கும்பலுக்கு வலை

அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கில் சாட்சி கூறிய அண்ணன் வெட்டி படுகொலை தம்பி கவலைக்கிடம்: மர்ம கும்பலுக்கு வலை

by Suresh

புழல்:சோழவரம் அருகே, அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்ட வழக்கில் சாட்சி கூறிய சகோதரர்களை மர்ம கும்பல் ஒன்று சரமாரியாக வெட்டியது. இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோழவரம் அருகே, நெடுவரம்பாக்கம் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக இளங்கோவன்(29). என்பவர் உள்ளார். இவர், அப்பகுதி திமுக நிர்வாகி. இவரது அண்ணன் லட்சுமணன்(32). இவர்கள் நேற்று முன்தினம் இரவு நெடுவரம்பாக்கம், பெரிய காலனி பகுதியில் உள்ள தங்களின் நிலங்களுக்கு தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு மர்ம கும்பல், இருவரையும் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியது. இதில், படுகாயம் அடைந்த அவர்கள் அலறி துடித்தவாறு ரத்த வெள்ளத்தில் மயங்கி சரிந்தனர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மயங்கி கிடந்த அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு, அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவருக்கும் முதலுதவி சிகிச்சை அளித்து, மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு இருவரையும் பரிசோதித்தபோது, வரும் வழியிலேயே லட்சுமணன் இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். படுகாயம் அடைந்த இளங்கோவன், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

இப்புகாரின்பேரில், சோழவரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பல் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில், நெடுவரம்பாக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் அம்பேத்கர் சிலை சேதப்படுத்தப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக இளங்கோவனும் அவரது அண்ணனும் சாட்சியம் அளித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த எதிர் தரப்பினர், அண்ணன்-தம்பியை கத்தியால் சரமாரி வெட்டியதில், லட்சுமணன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இக்கொலை வழக்கு தொடர்பாக போலீசார், முன் விரோதம் காரணமாக இவர்கள் தாக்கப்பட்டனரா? இல்லை வேறு காரணமா? என பல்வேறு கோணங்களில் விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

You may also like

Leave a Comment

7 − one =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi