சூலூர்: அண்ணனின் பைக்கை பஞ்சர் செய்து விட்டு, காதலனுடன் தங்கை ஓட்டம் பிடித்தார்.திருச்சி மாவட்டம், சமயபுரத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர், அரசூர் பகுதியில் உள்ள தனியார் மில்லில் வேலை செய்து கொண்டே படித்து வருகிறார். இவர், பள்ளியில் படிக்கும் போது அதே ஊரை சேர்ந்த வாலிபரை காதலித்துள்ளார்.பணியில் சேர்ந்து 6 மாதங்கள் ஆன நிலையில் வீட்டிற்கு சென்று வருவதாக நிர்வாகத்திடம் அனுமதி பெற்று அண்ணனுக்கு போன் செய்து தன்னை அழைத்துச்செல்ல வருமாறு கூறியுள்ளார். அதே நேரத்தில் காதலனுக்கும் போன் செய்து அழைத்துள்ளார்.
அண்ணனும், காதலனும் ஒரே சமயத்தில் அந்த இளம்பெண் பணி புரியும் நிறுவனத்திற்கு வந்தனர்.நிறுவனத்துக்குள் அண்ணன் செல்ல, காதலன் அவரது பைக் டயரை பஞ்சராக்கி விட்டு அருகில் இருந்த கடையில் ஏதும் அறியாதது போல, காதலிக்காக காத்திருந்தார். தங்கையுடன் வெளியில் வந்தவர், பைக் டயர் பஞ்சராகி உள்ளதை அறிந்து மெக்கானிக் ஷாப்பிற்கு தள்ளிக்கொண்டு சென்றார். இந்த சமயத்தில் இளம்பெண் அங்கு தயாராக இருந்த காதலனின் டூவீலரில் ஏறி பறந்துவிட்டார்.
இதனால் செய்வதறியாது திகைத்து நின்ற அண்ணன், பெற்றோருக்கு போன் மூலம் தகவல் கூறினார். பெற்றோர் இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அண்ணனுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு காதலனுடன் மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றனர்.