சென்னை : இந்திய வீராங்கனை பவானி தேவிக்கு சசிகலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.சென்னையை சேர்ந்த சந்தலவதா பவானி தேவி (29 வயது), ஒலிம்பிக் வாள்வீச்சு போட்டிக்கு தேர்வான முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றவர். டோக்கியோ ஒலிம்பிக்கில் ‘சுற்று 32’ உடன் பவானி வெளியேறினார். இந்நிலையில், சீனாவின் வூக்சி நகரில் நடந்து வரும் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் சேபர் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்றார். இதன் மூலம் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாறையும் படைத்துள்ளார்.
இது தொடர்பாக சசிகலா தனது ட்விட்டர் பக்கத்தில், “சீனாவில் உள்ள வுக்ஸி நகரில் நடைபெற்று வரும் ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப் மகளிருக்கான போட்டியில் தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை பவானி தேவி வெண்கலப் பதக்கம் வென்று வரலாற்று சாதனையை படைத்துள்ளதற்கு எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகளை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.மேலும், ஆசிய வாள்வீச்சு சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையை நம் தமிழகத்திற்கு பெற்று தந்த பவானி தேவி அவர்கள் மென்மேலும் பல்வேறு சாதனைகளை புரிய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.