செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே லாரி மோதியதால் ரயில்வே கேட் உடைந்தது. விழுப்புரத்தில் இருந்து இருங்காட்டுக்கோட்டை நோக்கி சென்ற லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து ரயில்வே கேட் மீது உரசியது. விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து செங்கல்பட்டு வழியாக ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள இருங்காடுக்கோட்டைக்கு வந்த லாரி சிங்கப்பெருமாள் ரயில்வே கேட் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் காரணமாக சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய விரைவு ரயில் மற்றும் சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை வரக்கூடிய மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டது.
அதுமட்டுமின்றி தென் மாவட்டங்களில் இருந்து சென்னை நோக்கி வரக்கூடிய விரைவு ரயில்கள் மற்றும் புறநகர் ரயில்கள், சரக்கு ரயில்களும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் ரயில்களில் பயணம் செய்த பயணிகள் மிகவும் அவதிக்குள்ளாகி உள்ளனர். இதனிடையே சிங்கப்பெருமாள் கோயில் ரயில்வே கேட்டை கடந்து உரக்கடம், ஸ்ரீபெரும்புதூர் செல்லக்கூடிய பொதுமக்கள், இருசக்கர வாகனத்தில் செல்ல கூடியவர்கள் மற்றும் பேருந்துகள், கார், கனரக வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
ரயில்வே கேட்டை சேதப்படுத்திய லாரியை பறிமுதல் செய்யப்பட்டு, லாரி ஓட்டுநரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சேதமடைந்த ரயில்வே கேட்டை ரயில்வே ஊழியர்கள் சரிசெய்யு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரு மணிநேரத்திற்கு மேலாக தொடர்ச்சியாக பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது ரயில்வே சேவை சீராக தொடங்கியுள்ளது. இருப்பினும் ரயில் சேவை ஒரு மணிநேரத்திற்கு பிறகே ரயில் சேவை வழக்கம்போல செயல்படும் என்று ரயில்வே தரப்பில் தெரிவித்துள்ளனர்.