திருப்பத்தூர்: திருப்பத்தூர் அடுத்த சிம்மனபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜசேகரன். இவரது மூத்த மகன் பிரித்வி(3) விஷமங்கலத்தில் உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்கேஜி படித்து வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் தனியார் பள்ளி பஸ், சிறுவன் பிரித்வியை அழைத்து செல்ல அவர்களது வீட்டின் அருகே வந்தது. உடனே ராஜசேகரன், மகன் பிரித்வியை அந்த பள்ளி பஸ்சில் ஏற்றினார்.
சிறுவன் பஸ்சில் ஏறியதும் டிரைவர் வாகனத்தை இயக்கினார். அப்போது, ராஜசேகரனின் ஒன்றரை வயது குழந்தை புனிதன் அங்கே ஓடிவந்தான். சற்றும் எதிர்பாராதவிதமாக பஸ்சின் பின்பக்க சக்கரம் குழந்தையின் மீது ஏறியது. இதில் படுகாயம் அடைந்த குழந்தை புனிதன் தந்தை கண்ணெதிரே துடிதுடித்து இறந்தான். இதை கண்டதும் அதிர்ச்சியடைந்த டிரைவர் முனியப்பன் அங்கிருந்து தப்பிச்சென்று திருப்பத்தூர் தாலுகா காவல் நிலையத்தில் சரண் அடைந்தார்.