காஞ்சிபுரம் பட்டுக்கு மட்டும் ஃபேமஸ் இல்லை. இட்லிக்கும் ரொம்ப பேமஸ். காஞ்சிபுரம் வரதராஜா பெருமாள் கோயிலுக்கு செல்பவர்கள் இந்த இட்லியைச் சாப்பிட தவறுவதில்லை. காஞ்சிபுரத்தின் பல ஃபுட்டிகளுக்கு இந்த இட்லிதான் ரெகுலர் பிரேக் ஃபாஸ்ட். புழுங்கல் அரிசி, பச்சரிசி, உளுந்தம்பருப்பு ஆகியவற்றைக் கலந்து அரைத்து ஒரு நாள் முழுக்க புளிக்க வைப்பார்கள். புளித்த மாவுடன் சீரகம், மிளகு, இஞ்சி, பெருங்காயம், கறிவேப்பிலை உள்ளிட்டவற்றை நெய்யில் வறுத்து நன்கு மிக்ஸ் செய்வார்கள். பின்னர் இதனை ஆவியில் அவிப்பார்கள். நன்கு வெந்த காஞ்சிபுரம் கோயில் இட்லியை மந்தார இலையில் வைத்துக் கொடுப்பார்கள். காஞ்சிபுரத்தில் பிரபலமான இந்த இட்லி சென்னையிலும் கிடைக்கிறது. காஞ்சிபுரத்தில் தயார் செய்யப்படும் இந்த இட்லி, செவ்வாய்க்கிழமை தோறும் மேற்கு மாம்பலம் அயோத்தியா மண்டபத்திலும், வெள்ளிக்கிழமை மயிலாப்பூர் காளத்தி ரோஸ்மில்க் கடை அருகிலும், சனிக்கிழமை நங்கநல்லூர் தபால் நிலையம் அருகிலும் கிடைக்கிறது. இந்த இட்லியை மிளகாய் சட்னியோடு சேர்த்து சாப்பிடும்போது அல்டிமேட்டாக இருக்கும்.
ஹலீம்
இது ரம்ஜான் நோன்புக்காலம். இஸ்லாமியர்கள் ரம்ஜான் பண்டிகையையொட்டி காலை முதல் மாலை வரை உணவு உண்ணாமல் இருப்பது வழக்கம். நோன்பு நாட்களில் மாலை நேரத்தில், தொழுகையை முடித்துவிட்டு அன்றைக்கு இழந்த சக்தியை மீண்டும் பெற சத்துகள் அதிகம் நிறைந்த உணவினை எடுத்துக் கொள்வார்கள். இதில் அவர்களின் முதல் தேர்வாக இருப்பது ஹலிம்தான். சிக்கனையோ, மட்டனையோ நல்ல கூழ் போல வேக வைத்து தயார் செய்வதுதான் ஹலிம். சென்னை ராயப்பேட்டை பீட்டர் சாலையில் உள்ள மும்பை ஹலிம்வாலா என்ற உணவகத்தில் நேர்த்தியான முறையில் ஹலிமைத் தயார் செய்து வழங்குகிறார்கள். நன்கு வேகவைத்தை ஹலிமை ஒரு கப்பில் ஊற்றி அதன் மீது வறுத்த வெங்காயம் மற்றும் எலுமிச்சைச்சாறைப் பிழிந்து கொடுப்பார்கள். இதனை ஒரு சிறிய கரண்டியில் அள்ளிப் பருகும்போது சுவை அள்ளும். ஹெல்த்தியான ஹலிம் சாப்பிட நினைப்பவர்கள் ராயப்பேட்டை மும்பை ஹலிம்வாலாவை ஒருமுறை ட்ரை
பண்ணிப் பாருங்க.
முட்டை ஆப்பம் ஆட்டுக்கால் பாயா
ஆட்டுக்கால் பாயா சென்னை மக்களின் ஃபேவரைட் உணவுகளில் ஒன்று. இதோடு பரோட்டா, இட்லி, தோசை, சப்பாத்தி என எதை எடுத்துக்கொண்டாலும் நல்ல காம்பினேஷனாக இருக்கும். ஆனால் இதோடு முட்டை ஆப்பம் வைத்து சாப்பிட்டவர்களுக்குத்தான் தெரியும் அதனுடைய தாறுமாறான ருசி. இந்த காம்பினேஷன் டிஷ் சென்னை அண்ணா சாலையில் உள்ள சங்கம் உணவகத்தில் கிடைக்கிறது. பதமாக வெந்த ஆப்பத்தின் மீது ஒரு ஆஃப்பாயிலை ஊற்றி அதற்கு ஜோடியாக இந்த ஆட்டுக்கால் பாயாவைக் கொடுப்பார்கள். நன்கு வெந்திருக்கும் ஆட்டுக்காலில் உள்ள கறியை எடுத்து முட்டை ஆப்பத்தோடு சேர்த்து வாயில் போடுவதற்கு முன்பே எச்சில் ஊறத் தொடங்கிவிடும். நன்கு வெந்த பாயாவில் இருக்கும் எலும்பு மெல்லும் அளவிற்கு இருக்கும். ஒரு நல்ல முட்டை ஆப்பம் ஆட்டுக்கால் பாயா சாப்பிடுவதற்கு அட்டகாசமான ஸ்பாட் இது.