ஆற்காடு: பள்ளிக்கு மாணவி சீருடை அணியாமல் வந்ததை கேட்ட ஆசிரியருக்கு பிளேடு வெட்டு விழுந்தது. இதுதொடர்பாக மாணவியின் தந்தையான லாரி டிரைவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த சீக்கராஜபுரத்தைச் சேர்ந்தவர் நித்தியானந்தம் (46). இவர் ஆற்காடு அண்ணா நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் கணித ஆசிரியராக பணி புரிகிறார்.
அப்பள்ளியில் மாசாப்பேட்டை அண்ணா நகரை சேர்ந்த லாரி டிரைவர் கணபதி (45) என்பவரது மகளும் படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு பள்ளி சீருடை அணியாமல் சாதாரண உடையில் அந்த மாணவி பள்ளிக்கு வந்தாராம். இதை ஆசிரியர்கள் கண்டித்துள்ளனர். இதுகுறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் கணபதி ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
நேற்று மாலை கணபதி, மது போதையில் பள்ளிக்கு சென்று ஆசிரியர் நித்தியானந்தத்தை ஆபாசமாக திட்டி அவரை பிளேடால் வெட்டியுள்ளார். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதில் படுகாயமடைந்த ஆசிரியர் நித்தியானந்தத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் ஆற்காடு டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து கணபதியை கைது செய்தனர். நேற்றிரவு மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.