மாமல்லபுரம்: கடல் கடந்து வந்து தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில், கரும் புகைமாசை தவிர்க்கவும், சைக்கிள் பயணம் மேற்கொள்ள வலியுறுத்தியும் நெதர்லாந்து தம்பதியினர் விழிப்புணர்வு செய்து வருகின்றனர்
நெதர்லாந்து நாட்டை சேர்ந்த வாப்கீ (47), சாப்ட்வோர் என்ஜீனியராக பணிபுரிந்து வருகிறார். இவரது, மனைவி ஜோலந்தா (42), தனியார் கம்பெனியில் சேல்ஸ் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். இவர்கள், நெதர்லாந்து நாட்டின் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள். உலகம் முழுவதும் பைக், கார், வேன், பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்களில் இருந்து வெளியேறும் கரும்புகை மாசுவினால் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிப்பை சந்திக்கிறது என கருத்து தெரிவிக்கின்றனர்.
உலகளவில் இந்தியாவில்ன் வாகனங்களில் இருந்து வெளியேறும் கரும் புகையினால் சுற்றுச்சூழல் மாசு அதிகம் ஏற்படுவதும், அதனால் பொதுமக்கள் மூச்சுத் திணறல், நுரையீரல், கண் நோய் மற்றும் இதயநோய் உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்படுவதாகவும் கவலை தெரிவித்தனர். அந்த கவலையை போக்குவதற்கான ஒரே தீர்வு காற்று மாசு இல்லாத சைக்கிள் பயணங்களை பொது மக்களாகிய நாம் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி நெதர்லாந்து நாட்டு தம்பதியினர் இந்தியா வந்துள்ளனர். இவர்கள் தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா முழுவதும் ஒரு மாதம் சைக்கிளில் சென்று விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள முடிவு செய்தனர்.
சென்னையில் இருந்து சைக்கிள் பயணத்தை தொடங்கிய தம்பதியினர் இசிஆர் சாலை வழியாக நேற்று மாமல்லபுரம் வந்தனர். தொடர்ந்து, தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய இடங்களுக்கு சென்று முக்கிய நகரங்களில் சுற்றுச்சூழல் சம்பந்தமான விழிப்புணர்வு சைக்கிள் பயணம் மேற்கொண்டு 30 நாட்களுக்குள் சைக்கிள் விழிப்புணர்வு பயணத்தை நிறைவு செய்ய உள்ளனர். இத்தம்பதியினர், விழிப்புணர்வு சைக்கிள் பயணத்தின்போது யாருடைய உதவியையும் நாடாமல் கையில் இந்தியாவின் வரைபடத்தை வைத்துக் கொண்டு சைக்கிள் பயணம் மெற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.