கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம், ஒழுகச்சேரி மெயின்ரோட்டில் தமிழ்சேவாசங்கம்-தமிழ்நாடு சார்பாக நேற்று நடந்த சிவகுலத்தார் பண்பாட்டு கலை நிகழ்ச்சிக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார். இதனையறிந்து திருவாய்ப்பாடி கிராமத்தில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு தஞ்சாவூர் வடக்கு மாவட்ட விசிக செயலாளர் முல்லைவளவன் தலைமையில் கட்சியினர் குவிந்தனர். அம்பேத்கரை இழிவுபடுத்தி பேசிவரும் ஆளுநர் ஆர்.என்.ரவி வருகையை கண்டித்து கருப்புக்கொடியுடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் வந்து 30 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து கருப்புக்கொடிகளை பறிமுதல் செய்தனர். இதேபோல ஜெயங்கொண்டத்தில் மாவட்ட செயலாளர் கதிர்வளவன் தலைமையில் கருப்பு கொடியுடன் வந்த 20 பேரும் கைது செய்யப்பட்டனர்.