டெல்லி: பாஜக எம்.பி.யின் ஆபாச செயலை அம்பலப்படுத்திய மராட்டிய டி.வி. லோக் ஷாகி ஒளிபரப்புக்கு ஒன்றிய அரசு 30 நாட்கள் தடை விதித்துள்ளது. சேனல் அதன் செயல்பாடுகள் தொடர்பான சில ஆவணங்களை சமர்ப்பிக்க தவறியதால், 30 நாட்களுக்கு ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது. 2023, செப்டம்பரில் 72 மணி நேரம், லோக் ஷாகி டி.வி. ஒளிபரப்புக்கு தடை விதித்த ஒன்றிய அரசு, தற்போது 30 நாள் தடை விதித்துள்ளது. யார் உரிமம் பெற்றார்களோ, அவர்கள் லோக் ஷாகி டி.வி.யை நடத்தாமல் வேறு நபர்கள் நடத்தி வருவதாக ஒன்றிய அரசு புகார் அளித்துள்ளது.
லோக் ஷாகி டி.வி. நிர்வாகமோ, 4 ஆண்டுகளாக தொலைக்காட்சி செயல்பட்டு வருவதாக விளக்கம் அளித்துள்ளது. வேண்டுமென்றே லோக் ஷாகி டி.வி. நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் புகார் தெரிவித்திருக்கிறது. தற்காலிகமாக உரிமத்தை ரத்து செய்த உத்தரவை எதிர்த்து நீதிமன்றம் சென்று வெற்றி பெறுவோம் என்று லோக் ஷாகி கூறியுள்ளது. தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் இதுகுறித்து பேசிய சேனலின் தலைமை ஆசிரியர் கமலேஷ் சுதர், நேற்று (ஜன.9) மாலை சுமார் 5.30 மணிக்கு ஆர்டரைப் பெற்றோம். மாலை 6 மணிக்குள் சேனல் ஒளிபரப்பாகவில்லை.
ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் எங்கள் உரிமத்தை நிறுத்தி வைத்துள்ளது. நாங்கள் சட்டரீதியாக அதை எதிர்த்து போராடப் போகிறோம். வரலாற்றில் ஒரு சேனலை 30 நாட்களுக்கு மூடுவது இதுவே முதல் நிகழ்வு. நாங்கள் பயப்பட மாட்டோம் என்று கூறினார். மேலும், லோக்ஷாஹி எப்போதும் செய்திகளையும் உண்மைகளையும் நியாயமான, சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற முறையில் வழங்கியுள்ளது. நாங்கள் அரசாங்கத்தின் நல்ல புத்தகங்களில் இல்லாமல் இருக்கலாம், ஆனால் எங்கள் உண்மை அறிக்கை மற்றும் சக்திகளின் தவறான செயல்கள் குறித்த வலுவான கருத்துக்களை பாராட்டும் மக்களின் இதயங்களில் நாங்கள் வாழ்கிறோம் என்றும் ஆசிரியர் சுதர் தெரிவித்தார்.