சென்னை: பாஜக கூட்டணியில் ஓ.பி.எஸ். மற்றும் டிடிவி தினகரனை கொண்டுவருவதற்கான முதற்கட்ட பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் தமிழகத்தில் கூட்டணி கட்சிகளின் பேச்சுவார்த்தை தீவிரமடைந்துள்ளது. அதிமுக, திமுக, பாஜக என மூன்று அணிகளாக தேர்தலை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அடிப்படையில் முதற்கட்டமாக பாஜக கூட்டணியில் இருக்கக்கூடிய டிடிவி தினகரன், ஓபிஎஸ் உடன் பாஜக பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. முதற்கட்ட பேச்சுவார்த்தையில், திருச்சி மற்றும் சிவகங்கையில் போட்டியிட அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி அமமுகவின் சின்னமான குக்கர் சின்னத்திலேயே போட்டியிடும் என டிடிவி தினகரன் பேச்சுவார்த்தையில் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தேனி, மதுரை, தஞ்சையில் தனது ஆதரவாளர்கள் போட்டியிட தொகுதிகளை ஒதுக்குமாறு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பாஜகவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே பாஜகவுடன் பேசி வருகிறோம் என்பதை பன்னீர்செல்வம் உறுதிப்படுத்தியுள்ளார்.