விருதுநகர்: விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில்,‘ ராமர் கோயில் விழா என்பது பாஜ, ஆர்எஸ்எஸ் காரர்களின் விழாவாக மாற்றப்பட்டுள்ளது. தேர்தல் தோல்வி பாஜவிற்கு தெரிகிறது. பாதுகாப்பிற்காக ராமரை காட்டி தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றனர். இந்திய மக்கள் தெளிவாக உள்ளனர். ஆளுநர் அவரது பதவிக்கான தன்மையை இழந்து விட்டார். பாஜ மாநில தலைவரை போல் செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தில் மோடிக்கு எதிர்ப்பு அலை உருவாகி உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் மோடிக்கான வாக்கு இல்லை. பதவிக்காக எதையும் செய்யக்கூடியவர் அண்ணாமலை. நீதிமன்றங்கள் நிராகரித்த விஷயங்களை மக்களிடம் கொண்டு சென்று, அதன்மூலம் அரசியல் லாபம் பார்க்க நினைக்கிறார். நிர்மலா, அண்ணாமலை இருவரும் தமிழக கலாசாரத்தை சொந்தம் கொண்டாட முயல்கின்றனர். திருவள்ளுவர் உள்பட அனைவருக்கும் காவி சாயம் பூச நினைக்கின்றனர்’ என்றார்.