ஹாசன்: பாஜ ஆட்சியில் நடந்த அனைத்து ஊழல், முறைகேடுகள் குறித்தும் விசாரணை நடத்தப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார். ஹாசனில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது, ‘பாஜ ஆட்சியில் நடந்த போலீஸ் எஸ்ஐ பணிக்கான ஆட்சேர்ப்பில் நடந்த ஊழல் குறித்து சிஐடி விசாரணை நடத்தி வருகின்றன்றனர். இந்த விசாரணை தீவிரப்படுத்த உத்தரவிட்டுள்ளேன். இதில் யார் தவறு செய்திருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள். சாம்ராஜ்நகரில் கொரோனா காலத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் நோயாளிகள் இறப்பு ஏற்பட்டது. அப்போது சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சுதாகர் 2 பேர் மட்டுமே மரணமடைந்ததாக குறிப்பிட்டார். ஆனால் நிறைய பேர் இறந்துள்ளனர்.
இது குறித்து விசாரணை நடத்தப்படும். 4 மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது. இது குறித்தும் விசாரிக்கப்படும். மேலும் 40 சதவீத கமிஷன் குறித்தும், கொரோனா காலத்தில் மருந்து பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடு, பிட்காயின் ஊழல் என வரிசையாக விசாரணைக்கு உத்தரவிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.