சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: ராமேஸ்வரம், தங்கச்சிமடத்திலிருந்து கடந்த 3ம் தேதி மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்ததோடு, 2 நவீன மீன்படி படகுகளையும் பறிமுதல் செய்திருக்கிறது. கடந்த 2016ல் இரு நாட்டு அரசுகளும் சேர்ந்து கூட்டு பணிக்குழுவை ஏற்படுத்தி, 3 மாதங்களுக்கு ஒருமுறை கூடுவதோடு, இரு நாட்டு மீன்வளத்துறை அமைச்சர்களும் சந்தித்து பேசி, பிரச்னைகளுக்கு தீர்வு காண முடிவு செய்யப்பட்டது. அந்த கூட்டு பணிக்குழு கடந்த 2022-க்கு பிறகு கூடவே இல்லை. இதற்கான முயற்சிகளை ஒன்றிய பாஜ அரசு எடுக்காததன் விளைவாக மீனவர் பிரச்னைகளை தீர்த்து வைக்க முடியவில்லை.
கடல் தாமரை மாநாடு நடத்தி மீனவர்களுக்கென தனி அமைச்சகம் தொடங்கப்படும் என அறிவித்து 10 ஆண்டுகள் ஆகியும் அதை நிறைவேற்றவில்லை. மீனவர்களின் வாழ்வாதாரத்தை தொடர்ந்து சீரழித்து வருவதையும், இலங்கை கடற்படையினர் மூலம் மீனவர்கள் கைது, படகுகள் பறிமுதல் கண்டித்தும் ஒன்றிய பாஜ அரசுக்கு எதிராக அகில இந்திய மீனவர் காங்கிரஸ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெர்னாண்டோ தலைமையில் வரும் 10ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் ராமேஸ்வரம், பாம்பன் பேருந்து நிலையம் அருகே அன்னை இந்திரா தேசிய நெடுஞ்சாலை பாலத்தின் முன்பு மீனவ அமைப்புகளை இணைத்துக் கொண்டு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.