கம்பம்: தேனி மாவட்டத்தில் இருந்து கம்பம்மெட்டு, குமுளி, போடிமெட்டு மலைப்பகுதிகள் வழியாக கேரளாவிற்கு தினமும் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து தேனி மாவட்ட கலெக்டர் சஜீவனா உத்தரவின்படி, உத்தமபாளையம் ஆர்டிஓ பால்பாண்டி, வட்ட வழங்கல் அதிகாரி பாண்டி தலைமையிலான அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவு கம்பம்மெட்டு சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த வாகனம் ஒன்றை வழிமறித்து சோதனை நடத்தினர். அதில், மூட்டை மூட்டையாக 1,983 கிலோ ரேஷன் அரிசி கடத்திச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து உத்தமபாளையம் புட்செல் போலீசார் நடத்திய விசாரணையில், ரேஷன் அரிசியை கடத்தி வந்தவர் உத்தமபாளையத்தை சேர்ந்த சுந்தர் (48) என்பதும், பாஜ மாவட்ட செயற்குழு உறுப்பினர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து சுந்தரை போலீசார் கைது செய்தனர்.