திருமலை: பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், நடிகையுமான விஜயசாந்தி கடந்த சில நாட்களாக பாஜகவிற்கு எதிராக விமர்சனம் செய்து வருகிறார். தெலங்கானா மாநில பாஜக தலைவராக கிஷன் பொறுப்பேற்ற போது கூட நிகழ்ச்சியின் நடுவில் இருந்து விஜயசாந்தி வெளியேறினார். தனக்கு பின் கட்சியில் இணைந்தவர்களுக்கு கட்சியில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும், தனக்கு இல்லாததால் விஜயசாந்தி அதிருப்தியாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், விஜயசாந்தி பாஜகவை விட்டு விலகுவார் என சமூக வலைதளங்களில் கூறப்பட்டு வந்தது. பாஜக ஆளும் மாநிலமான மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த அநீதி குறித்து அவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். அதில், மணிப்பூரில் நடந்த சம்பவம் வெட்க கேடானது. இந்த செயல் ஒட்டுமொத்த நாட்டையும் தலைகுனிய வைத்துள்ளது. மேற்கண்ட செயலில் ஈடுபட்ட குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். எந்த மாநிலத்திலும் இதுபோன்ற குற்றங்கள் நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் பதிவிடப்பட்டுள்ளது. இது தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.