சென்னை: தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது என்பது தொண்டர்களின் உணர்வை பிரதிபலித்து எடுத்த முடிவு என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் திருவாக்கவுண்டனூரில் பேசிய எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை பொறுத்தவரை மக்கள்தான் எஜமானர்கள். தமிழக மக்களின் எண்ணங்களை நாடாளுமன்றத்தில் அதிமுக பிரதிபலிக்கும். 40 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி பிரமாண்ட வெற்றி பெறும்.
ஊடகங்கள் உண்மை செய்திகளை மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும். ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை அறிவித்துவிட்டா தேர்தலை சந்திக்கின்றனர். அதிமுக மாநிலத்தின் உரிமையை காக்க நாடாளுமன்ற தேர்தலை சந்திக்கும். தமிழக மக்களின் உரிமைகளை காக்கவே அதிமுக போராடுகிறது. நவீன் பட்நாயக், மம்தா எல்லாம் பிரதமர் வேட்பாளரை அறிவித்தா தேர்தலை சந்திக்கிறார்கள்? தமிழகம், புதுவையிலுள்ள 40 தொகுதியிலும் அதிமுக கூட்டணி வெல்லும்.
எடப்பாடி பழனிசாமி வாய் திறக்கவில்லை என்று பலர் கூறி வருவதற்கு முற்றுபுள்ளி வைக்கிறேன். பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்தும் அதிமுக விலகுவதாக அறிவித்தது தனிப்பட்ட பொதுச்செயலாளர் முடிவு அல்ல. ஒட்டு மொத்த தொண்டர்களின் முடிவு. நீங்கள் நினைத்தபடியே அதிமுக நடந்துகொண்டது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.