அகமதாபாத் : குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஏழை விவசாயி ஒருவரை ஏமாற்றி பாஜகவுக்கு ரூ.10 கோடி நன்கொடை கொடுக்க வைத்தது அம்பலமாகி உள்ளது. குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தில் வசிக்கும் பட்டியலின விவசாயி மன்வர் என்பவரிடம் கடந்த 2023ம் ஆண்டு அதானி நிறுவனம் நிலத்தை வாங்கி உள்ளது. அதற்கான ரூ.11.14 கோடி பணத்தை கொடுக்காத அந்நிறுவனம் இவ்வளவு பெரிய தொகை வங்கி கணக்கில் டெபாசிட் செய்தால் வருமான வரித்துறை சோதனைக்கு ஆளாக நேரிடும் என்று கூறியுள்ளது. இதனால் அந்த தொகைக்கு தேர்தல் பத்திரங்களை வாங்கினால், சில ஆண்டுகளில் அந்த தொகை மதிப்பு கூடும் என அதானி நிறுவன மேலாளர் மஹிந்திர சிங்க் சோதா என்பவர் கூறியதாக தெரிகிறது.
இதனை நம்பி தேர்தல் பத்திரங்களை வாங்க மன்வர் குடும்பம் ஒப்புக் கொண்டுள்ளது. அதன்படி கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாங்கப்பட்ட அந்த தேர்தல் பத்திரங்களை பாஜக பணமாக்கி இருப்பது தற்போது அம்பலம் ஆகியுள்ளது. தாங்கள் ஏமாற்றப்பட்டதை பட்டியலினத்தைச் சேர்ந்த அந்த விவசாய குடும்பத்தினர் கடந்த மார்ச் 18ம் தேதி குஜராத் போலீசில் புகார் அளித்தனர். ஆனால் இதுவரை போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை என்று கூறப்படுகிறது. அதானி நிறுவனத்தின் 4 இயக்குனர்கள், மேலாளர் மகேந்திர சிங், பாஜக பிரமுகர் ஹேமந்த் உள்ளிட்டோர் மீது விவசாய குடும்பத்தினர் புகார் அளித்துள்ளனர்.