பாட்னா: பீகாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இங்கு முதலில் பாஜ உடன் கூட்டணி வைத்து ஆட்சி அமைத்த நிதிஷ், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அதில் இருந்து விலகி, காங்கிரஸ், ஆர்ஜேடி உடன் கூட்டணி அமைத்து மீண்டும் முதல்வரானார். இதனிடையே, பாட்னாவில் நேற்று முன்தினம் நடந்த நிகழ்ச்சியில் பேசிய பாஜ மாநில தலைவர் சாம்ராட் சவுத்ரி, “பாஜ.வின் ஆதரவுடன் 5 முறை முதல்வராக இருந்த நிதிஷ், பிரதமராகும் ஆசையில் ஆர்ஜேடி உடன் கூட்டணி வைத்து, பாஜ.வின் முதுகில் குத்தி விட்டார். தற்போது அவரது கட்சி வாயில் மண்ணை கவ்வும். மக்களவை தேர்தல், 2025ம் ஆண்டில் நடக்க உள்ள பீகார் சட்டசபை தேர்தல்களில் நிதிஷ் குமார், அவரது கட்சியை பாஜ தவிடு பொடியாக்கும்,” என்று கூறினார். இந்நிலையில், சவுத்ரி கருத்து குறித்த பத்திரிகையாளர்களின் கேள்விக்கு நிதிஷ், “காவி கட்சி தலைவர்கள் அறிவற்றவர்கள். அவர்(சவுத்ரி) சொன்னபடி செய்ய சொல்லுங்கள் பார்ப்போம் ,” என்று ஆவேசமாக பதிலளித்தார்.