Tuesday, May 28, 2024
Home » பாஜ வெறுப்பு அரசியலை மக்கள் ஏற்கமாட்டார்கள் நமது வாக்குகளை திருட போலியான தமிழ் பாசம்: மோடி மீது தயாநிதி மாறன் எம்பி தாக்கு

பாஜ வெறுப்பு அரசியலை மக்கள் ஏற்கமாட்டார்கள் நமது வாக்குகளை திருட போலியான தமிழ் பாசம்: மோடி மீது தயாநிதி மாறன் எம்பி தாக்கு

by MuthuKumar

மதுரை: மதுரை மாநகர் மாவட்ட ஆரப்பாளையம் 1ம் பகுதி திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம் திராவிட மாடல் நாயகரின் 71வது பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் ஆரப்பாளையம் கிராஸ் ரோட்டில் நடந்தது.

இதில் திமுக மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி செயலாளர், தயாநிதி மாறன் எம்.பி பேசியதாவது:
நான் பாராளுமன்றத்தில் பேசினேன். மோடி ஒவ்வொரு முறை வரும்போது தமிழ் மீது பெரும் காதல் கொள்கிறார். ஏதாவது ஒரு திருக்குறளை தெளிவாக பேசுகிறார். எப்படி இப்படி பேசுகிறார்? அவருக்கு தமிழ் தெரியுமா என கேட்கின்றனர். நன்றாக பாருங்கள். பேசும்போது அவருக்கு அருகில் 2 ஸ்டாண்ட் இருக்கும். அதை டெலிபிராம்ப்டர் என்போம்.

செய்தி வாசிக்கும்போது பயன்படுத்துவர். பேசுபவர் கண்ணுக்கு மட்டுமே தெரியும். தமிழ் வார்த்தைகளை இந்தியில் வைத்து பேசுவார். தமிழ்நாடு வந்தால் எனக்கு பிடித்த ஊர். தமிழ் தான் சிறந்த மொழி என்பார். அப்படியே கேரளா போனால் மலையாளம் தான் என்பார். பொய் பேசியே நம்மை கவர ஒவ்வொரு ஊருக்கும் போய், அவர்களது மொழியில் பேசி நமது வாக்கை திருடுவதற்காகத் தான் அப்படி பேசுகிறார்.

யாரும் பேசாத சமஸ்கிருதத்திற்கு ₹1,500 கோடி செலவிடுகிறார்கள். பல கோடி பேர் பேசும் தமிழுக்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால் தமிழ்நாட்டு மக்களை உங்களுக்கு பிடிக்காது. இங்கே நாம் அனைத்து மதத்தையும் மதிக்கிறோம். நமக்கு எம்மதமும் சம்மதம். அதைதான் பெரியார், அண்ணா, கலைஞர், தமிழ்நாடு முதல்வர் ஆகியோர் சொல்லித் தந்துள்ளனர். இந்து, இஸ்லாம், கிறிஸ்தவர் என்று யாரையும் நாம் பிரித்துபார்ப்பதில்லை. ஆனால், நீங்கள் வெறுப்பு அரசியல், செய்கிறீர்கள். பாஜவின் வெறுப்பு அரசியலை தமிழ்நாட்டு மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இந்தியை திணிக்கிறீர்கள். நாங்கள் எந்த மொழிக்கும் எதிரானவர்கள் அல்ல.

சென்னை பெருவெள்ளம், தென்மாவட்டத்தில் எதிர்பார்க்காத பெருவெள்ளம். ஆனால், பிரதமர் வந்து பார்க்கவில்லையே. முதல்வர் ₹6 ஆயிரம் ெகாடுத்தார். ஒன்றியத்தில் இருந்து வந்தார்கள், பார்த்தார்கள், மிக்சர் சாப்பிட்டனர். சென்றார்கள் அவ்வளவு தான். யார் தயவும் இன்றி முதல்வர் கொடுத்தார். தமிழ்நாட்டு மக்கள் மீது மோடிக்கு அக்கறை இல்லை. இப்போ வர்றாரே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை பார்த்திருக்கலாமே. ஒன்னும் செய்யவில்லை. தமிழ்நாட்டு மக்கள் அயோத்திக்கு சென்று சுவாமி கும்பிடுவர். ஆனால், பாஜகவுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இவ்வாறு பேசினார்.

You may also like

Leave a Comment

2 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi