சென்னை: மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணியை முறித்துக் கொள்வதாக எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக கூறியுள்ளார். சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தின் கட்சி நிர்வாகிகளை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்தார். அதன்பின் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், பாஜகவுடன் கூட்டணி முறிவு என்பது ஒரு மனதாக எடுக்கப்பட்ட முடிவு என்றும், அது தான் தொண்டர்களின் உணர்வு என்றும் கூறினார். மேலும் எந்த கட்சியுடனும் கூட்டணி குறித்து மறைமுகமாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்ற அவர், பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம் என்று பழனிசாமி தெரிவித்தார்.
பாஜக கூட்டணியை முறித்துக் கொள்வதாக கடந்த செப்டம்பர் மாதம் அதிமுக அறிவித்திருந்தது. ஆனால் அதிமுக அறிவித்தாலும் தற்போது வரை பாஜக அதிகாரப்பூர்வமாக கூட்டணி முறிவை அறிவிக்கவில்லை. மக்களவை தேர்தலுக்கு முன்பு மீண்டும் அதிமுகவுடன் கூட்டணியை புதுப்பிக்க பாஜக முயற்சி செய்வதாக தகவல் வெளியானது. தேசிய ஜனநாயக கூட்டணியில் ஏற்கனவே இருந்த தெலுங்குதேசம், பிஜு ஜனதா தளத்துடன் கூட்டணி அமைக்க பாஜக பேச்சு வார்த்தை நடத்த வருகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டிலும் அதிமுகவுடன் கூட்டணி புதுப்பிக்க பாஜக தீவிரமாக முயற்சித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.