புவனேஸ்வர்: ஒன்றிய அரசு கொண்டு வந்த மசோதாவுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு அளித்த நிலையில், அக்கட்சியுடன் கூட்டணி இல்லை என்று பாஜக அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒடிசாவில் ஆளும் பிஜூ ஜனதா தளம் கட்சியும் பாஜகவும் கடந்த 2000 முதல் 2009ம் ஆண்டு வரை ஒரே கூட்டணியில் இருந்தன. அதனிபின் நடந்த தேர்தல்களில் தனித்தனியாக போட்டியிட்டன. சமீபத்தில் ஒன்றிய அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், டெல்லி சேவை மசோதா போன்றவற்றுக்கு ஒன்றிய பாஜக அரசுக்கு பிஜூ ஜனதா தளம் ஆதரவு அளித்தது.
அதனால் வரும் ஒடிசா சட்டசபை மற்றும் லோக்சபா தேர்தலில் பாஜக – பிஜூ ஜனதா தளம் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து ஒன்றிய அமைச்சர் பூபேந்திர யாதவ் கூறுகையில், ‘ஒடிசாவில் அடுத்தாண்டு லோக்சபா தேர்தலும், சட்டசபை தேர்தலும் ஒரே நேரத்தில் நடைபெறும். பாஜக – பிஜூ ஜனதா தளம் இடையே கூட்டணி என்ற ேபச்சுக்கே இடமில்லை. ஒடிசாவில் நடக்கும் தேர்தலில், எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் பாஜக தனித்து போட்டியிடும். அடுத்தாண்டு ஒடிசாவில் ஆட்சி அமைப்போம்’ என்றார்.