ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்டின் இல்லத்தை முற்றுகையிட முயன்ற பாஜ இளைஞரணி தொண்டர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.ராஜஸ்தான், பில்வாரா மாவட்டத்தில் தோட்டத்தில் ஆடு மேய்த்து கொண்டிருந்த 14 வயது சிறுமி காணாமல் போய்விட்டார். செங்கல் சூளையில் சிறுமியின் காலணிகள் மற்றும் எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.
சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து எரித்து கொல்லப்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவத்தில் ஒரு சிறுவன் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில் பில்வாரா சம்பவத்தை கண்டித்து, போராட்டம் நடத்துவதற்காக மாநில முதல்வர் கெலாட்டின் இல்லத்தினை நோக்கி பாஜ இளைஞரணி தொண்டர்கள் சென்று கொண்டிருந்தனர்.
இதையறிந்த போலீசார் முதல்வரின் இல்லத்தின் அருகே தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ஆனால் போலீஸ் தடுப்புகளையும் தாண்டி அவர்கள் முன்னேறி செல்ல முயன்றனர். அப்போது போலீசார் தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இளைஞரணியை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் கைது செய்யப்பட்டனர்.