புதுடெல்லி: விலைவாசி உயர்வை தடுக்க ரூ.29க்கு ஒரு கிலோ அரிசி வழங்கும் பாரத் அரிசி திட்டத்தை ஒன்றிய அரசு நேற்று அமல்படுத்தியது. இந்தியாவில் கடந்த ஓராண்டில் தானியங்களின் சில்லறை விலை 15 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்தநிலையில் அரிசி நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் ஒரு கிலோவுக்கு ரூ.29 என்ற மானிய விலையில் ‘பாரத் அரிசி’யை ஒன்றிய அரசு நேற்று அறிமுகப்படுத்தியது. 5 கிலோ மற்றும் 10 கிலோ மூட்டைகளில் சப்ளை செய்யும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
‘பாரத் அரிசி’ விற்பனை செய்யும் 100 நடமாடும் வேன்களை கொடியசைத்து, ஐந்து பயனாளிகளுக்கு 5 கிலோ மூட்டைகளை வழங்கி இந்த திட்டத்தை உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று அறிமுகம் செய்து வைத்தார். இதற்காக 5 லட்சம் டன் அரிசி ஒதுக்கப்பட்டுள்ளது. இ-காமர்ஸ் தளங்கள் மூலமாகவும் அரிசி விற்பனை செய்யப்படும் .