டெல்லி: பாரத் என்ற பிராண்ட் பெயரில் ஒரு கிலோ ரூ.25 விலையில் அரிசி விற்பனை செய்ய ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் முக்கிய உணவான அரிசி விலை நாடு முழுவதும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இந்தியாவில் பணவீக்க விகிதம் தொடர்ந்து அதிகரிப்பதன் காரணமாக அரிசி விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அரிசி விலையை குறைக்க ஒன்றிய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில் அரிசி விற்க அரசு முடிவு செய்துள்ளது. தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தையிடல் கூட்டமைப்பு, தேசிய நுகர்வோர் கூட்டுறவு கூட்டமைப்பு மூலம் பாரத் அரிசி விற்கப்படும். ஏற்கனவே பாரத் பிராண்ட் பெயரில் ஒன்றிய அரசு பருப்பு வகைகள் மற்றும் கோதுமை மாவை விற்பனை செய்து வருகிறது.
கடந்த நவம்பரில் தானியங்களின் விலை 10.27 விழுக்காடு கூடியதை அடுத்து, அம்மாதத்தில் உணவுப் பணவீக்கம் 8.70 விழுக்காடு உயர்ந்தது. அதற்கு முந்திய மாதத்தில் இது 6.61 விழுக்காடாக இருந்தது. பயனீட்டாளர்கள் தங்களது மொத்த செலவில் கிட்டத்தட்ட பாதி உணவிற்காகச் செலவிடுகின்றனர். இந்திய உணவுக்கழக இருப்பில் இருந்து கோதுமையை விற்பனைக்கு விடுத்ததன் மூலம் கோதுமை விலை கட்டுக்குள் உள்ளது. எனவே அரிசி விலை கட்டுக்குள் வராமல் உயர்ந்து கொண்டே செல்வதை அடுத்து பாரத் பிராண்ட் பெயரில் அரிசியை விற்க ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது.