பெங்களூரு: தேர்தல் நடத்தை விதிகளை மீறி தமிழர்களை இழிவுபடுத்தி பேசிய ஒன்றிய அமைச்சர் ஷோபா கராந்தலஜே மீது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரு வடக்கு தொகுதி பாஜ வேட்பாளராக ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கராந்தலஜே போட்டியிடுகிறார். இவர் ராமேஸ்வரம் கபே குண்டு வெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புபடுத்தி பேசினார்.
இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகள் கண்டனத்தை பதிவு செய்தன. இதற்கிடையில், தமிழர்களை இழிவுபடுத்தி பேசியது மட்டுமின்றி தேர்தல் நடத்தை விதிகளை ஒன்றிய அமைச்சர் மீறியுள்ளார் என்று திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
இப்புகாரை பரிசீலித்த தேர்தல் ஆணையம், தேர்தல் நடத்தை விதிகளை மீறிய ஒன்றிய அமைச்சர் ஷோபா மீது நடவடிக்கை எடுக்க கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட்டது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123 (3ஏ), 125 மற்றும் 123 (3) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் ஒன்றிய பாஜ அமைச்சர் ஷோபா கராந்தலஜே மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.