சென்னை: தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியின் தலைவரும், கட்டுமான தொழிலாளர்கள் நலவாரிய தலைவருமான பொன்குமார் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து வருகிறார். பிரசாரத்தின் போது பொன்குமார் பேசியதாவது: உதயசூரியன் சின்னத்தில் வாக்களிப்பது மட்டுமே நாட்டுக்கு பயனுள்ளதாக அமையும். பாஜ தலைவர் அண்ணாமலை பத்திரிகையாளர்கள் சந்திப்பின் மூலமே கட்சியை வளர்க்க கூடியவர்.
மோடி வாயால் வடை சுடுபவர் என்றால் இவர் மீடியாக்கள் மூலம் கட்சியை மிகைப்படுத்துபவர். எந்த ஆட்சி பெண்களுக்கு பாதுகாப்பு கொடுத்தது? என்பது நாடறிந்த உண்மை. பெண்களுக்கு சொத்தில் சம உரிமை உண்டு என்பதை சட்டமாக்கி நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரு அரசு, அதற்கு பெயர் திராவிட மாடல் அரசு. பெண்களுடைய பொருளாதாரத்தை உயர்த்தி, சுயமாக வாழ்க்கையில் நிற்பதற்கு வசதியாக சுய உதவிக் குழுவை 1989ல் தமிழ்நாட்டில் தோற்றுவித்தது திமுக அரசு.
இன்றைக்கு இந்த சுய உதவி குழுக்கள் செயல்பட தொடங்கிய பின்னர் பெண்களின் பொருளாதார நிலை தலைகீழாக மாற்றப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் முதல்வராக வந்த பிறகு பெண்களுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கக்கூடிய ஒரு ஒப்பற்ற திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருகிறார்.
உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை, பெண்களுக்கு இலவச பேருந்து என பெண்களை சமநிலைப்படுத்துவதற்கான அற்புதமான திட்டங்களை நடைமுறைப்படுத்தக் கூடிய ஒரே முதல்வர் மு.க.ஸ்டாலின். ஆனால் பாஜ கட்சி, அரசு பெண்களுக்கு செய்தது என்ன, மணிப்பூரில் என்ன நடந்தது, அதை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த அரசு, ஒன்றிய பாஜ அரசு. பாஜவின் ஏமாற்று வேலையை எவரும் நம்ப மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார்.