ஓசூர்: ஓசூர் அருகே மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் கோட்டை பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன்(34), பூ வியாபாரம் மற்றும் கூழ் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தனது அத்தை மகளான பாரதி (25) என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இவர்களுடன் மகேந்திரனின் தாய் பத்மம்மா தங்கியுள்ளார்.
இந்தநிலையில் நேற்று காலை பாரதி தனது அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில் குடும்ப தகராறில் மகேந்திரன் மனைவியை கொலை செய்துவிட்டு தலைமறைவாகியிருப்பது தெரிந்தது. இதையடுத்து போலீசார் மகேந்திரனை தேடி வந்த நிலையில் நேற்றிரவு அதேபகுதியில் சுற்றித்திரிந்த அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.