திருப்போரூர்: படூரில் ரோலர் ஸ்கேட்டிங் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. தமிழ்நாடு ரோலர் ஸ்கேட்டிங் சங்கம் மற்றும் இந்திய ரோலர் ஸ்கேட்டிங் சம்மேளனம் ஆகியவற்றின் சார்பில் 61வது தேசிய ரோலர் ஸ்கேட்டிங் மாரத்தான் போட்டிகள் சென்னை அருகே படூரில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த போட்டிகளை படூர் ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்திய அளவில் 28 மாநிலங்களைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் சீனியர் மற்றும் ஜூனியர் பிரிவுகளில் இந்த போட்டிகளில் பங்கேற்றனர். இந்த போட்டிகளில் ஆண்கள் பிரிவில் முதல் 3 இடங்களை தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆனந்தன், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சஞ்சீவ்சிங், தமிழகத்தைச் சேர்ந்த கவீஷ் ஆகியோர் முறையே பெற்று சாதனை படைத்தனர். பெண்கள் பிரிவில் குஜராத்தைச் சேர்ந்த அனுஷ்கா, தமிழ்நாட்டைச் சேர்ந்த கார்த்திகா, கோபிகா ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களைப் பெற்றனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்பட்டது.