திருவனந்தபுரம்: கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த மது பார் உரிமையாளர்கள் சங்கத் தலைவரான ஒருவர், வேறு ஒரு பார் உரிமையாளருடன் செல்போனில் பேசிய ஆடியோ சமீபத்தில் வெளியானது. அதில், மதுக் கொள்கையில் மாற்றம் ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு பார் உரிமையாளரும் இரண்டரை லட்சம் ரூபாய் அரசுக்கு கொடுக்க வேண்டும் என்று அவர் கூறியிருந்தார்.
இது குறித்து கேரள மாநில காங்கிரஸ் தலைவர் கே.சுதாகரன் கூறியது: கேரள அரசு புதிய மதுக்கொள்கையை ஏற்படுத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் மாற்றங்களை ஏற்படுத்துவதற்காகத் தான் மது பார் உரிமையாளர்கள் சேர்ந்து வசூலித்து அரசுக்கு ரூ.25 கோடி கொடுக்க திட்டமிட்டுள்ளனர். மது பார் உரிமையாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு பொறுப்பேற்று கலால் துறை அமைச்சர் ராஜேஷ் உடனடியாக பதவி விலக வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.