பெங்களூரு: ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பில் கைதான 2 குற்றவாளிகளையும் 10 நாட்கள் என்.ஐ.ஏ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெங்களூரு குந்தலஹள்ளியில் உள்ள ராமேஸ்வரம் கபே ஓட்டலில் கடந்த மார்ச் 1ம் தேதி 10 நொடிகள் இடைவெளியில் 2 குண்டுகள் வெடித்து பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ வசம் ஒப்படைக்கப்பட்டது. அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த என்ஐஏ, இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக முசாவீர் சாஹிப் உசேன் மற்றும் அப்துல் மதீன் தாஹா என்ற 2 தீவிரவாதிகளின் புகைப்படங்களை வெளியிட்டு அவர்கள் தொடர்பான துப்பு கொடுப்பவருக்கு ரூ.10 லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
இந்தநிலையில் கொல்கத்தாவிலிருந்து 184 கிமீ தொலைவில் ஒரு ஓட்டலில் போலி ஆதார் அட்டை கொடுத்து தங்கியிருந்த முசாவீர் உசேன் (30) மற்றும் அப்துல் மதீன் (30) ஆகிய இருவரையும் நேற்று முன் தினம் கைது செய்தனர். அவர்களை பெங்களூருவிற்கு அழைத்து சென்று நேற்று காலை நீதிபதியிடம் ஆஜர்படுத்தினர். குண்டுவெடிப்பு குற்றவாளிகள் இருவரையும் 10 நாட்கள் என்.ஐ.ஏ காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதையடுத்து அவர்களை காவலில் எடுத்த என்.ஐ.ஏ அதிகாரிகள், அவர்களிடம் குண்டுவைக்க திட்டம் தீட்டியது தொடர்பாகவும், குண்டு வைத்ததற்கான காரணம் மற்றும் பயங்கரவாத அமைப்புடனான தொடர்பு ஆகியவை குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.