லக்னோ: மத்தியபிரதேசத்தில் அண்மையில் நடந்து முடிந்த பேரவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து மோகன் யாதவ் புதிய முதல்வராக பதவி ஏற்று கொண்டார். பதவியேற்ற வேகத்தில் புதிய உத்தரவுகளை மோகன் யாதவ் பிறப்பித்தார். அதன்படி, மத்தியபிரதேசத்தில் திறந்தவௌியில் முட்டை, மீன், இறைச்சி விற்க தடை விதித்தும், தடையை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தன் ட்விட்டர் பதிவில், “வேலையற்றவர்கள், பிற ஏழை கடின உழைப்பாளிகளுக்கு வாழ்வாதாரம் வழங்குவதற்கான புதிய முடிவுகளை எடுப்பதற்கு பதிலாக, மத்தியபிரதேசத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள பாஜ அரசு வேலைவாய்ப்பின்மையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மேலும் ஒடுக்க முயற்சிக்கிறது. மீன், இறைச்சி, முட்டை விற்பனை செய்பவர்கள் சுயதொழில் செய்கிறார்கள். இதற்கு தடை விதிப்பது கண்டனத்துக்குரியது. இந்த தடை உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.