Wednesday, May 8, 2024
Home » மீண்டும் வாக்குச் சீட்டு முறை கிடையாது எல்லா ஒப்புகை சீட்டுகளையும் எண்ண முடியாது: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

மீண்டும் வாக்குச் சீட்டு முறை கிடையாது எல்லா ஒப்புகை சீட்டுகளையும் எண்ண முடியாது: அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

by Karthik Yash

புதுடெல்லி: ஒப்புகைச் சீட்டு இயந்திரங்களின் வாக்குகளை நூறு சதவீதம் முழுமையாக சரி பார்க்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிபதிகள் நிராகரித்தனர். மக்களவை மற்றும் சட்டப்பேரவை ஆகிய தேர்தலுக்கு வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. அதேபோன்று விவிபேட் எனப்படும் வாக்கு ஒப்புகைச் சீட்டு இயந்திரமும் பயன்படுத்தப்படுகிறது. வாக்கு எண்ணிக்கையின் போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருக்கும் தரவுகள் மட்டும் முழுமையாக எண்ணப்படுகிறது. அதேநேரத்தில் விவிபேட் இயந்திரத்தில் விழும் ஒப்புகை சீட்டுகள் முழுமையாக எண்ணப்படுவது கிடையாது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் தில்லுமுல்லு நடப்பதாக அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர்.

இதுபோன்ற சூழலில் ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், அருண் குமார் அகர்வால் ஆகியோர் உள்பட உச்ச நீதிமன்றத்தில் மொத்தம் 3 பொதுநல மனுக்களை தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், “மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவாகும் வாக்குகளுடன் ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தில் விழும் சீட்டுகளையும் 100% முழுமையாக ஒப்பிட்டு பார்க்க உத்தரவிட வேண்டும்” என்று கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்து கடந்த 18ம் தேதி தீர்ப்பை ஒத்திவைத்திருந்தது.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை வழக்கை மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொண்ட நீதிபதிகள் தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் பல்வேறு முக்கிய கேள்விகளை எழுப்பி இருந்தனர். தேர்தல் ஆணைய அதிகாரியை நேரில் ஆஜராக சொல்லி, விளக்கத்தை பெற்றனர். இதையடுத்து தீர்ப்பை மீண்டும் ஒத்திவைத்தனர். இந்த நிலையில், மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தத்தா ஆகிய இருவரும் தனித்தனியான தீர்ப்பை நேற்று வழங்கினர். நீதிபதி சஞ்சீவ் கண்ணா வழங்கிய தீர்ப்பில், ‘‘இந்த விவகாரத்தை பொறுத்தவரை நெறிமுறைகள், தொழில்நுட்ப அம்சங்கள் ஆகியவை குறித்து விரிவாக ஆய்வு செய்துள்ளோம். இதில் முக்கியமாக 2 விஷயங்களை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

அதாவது, ‘‘வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் பொருத்தும் செயல்முறை முடிந்ததும் அதற்கு சீல் வைக்கப்பட வேண்டும். மேலும் பதியப்பட்ட தரவுகள் அனைத்தும் குறைந்தபட்சம் 45 நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கன்ட்ரோலர் மற்றும் மெமரி சிப் ஆகியவற்றை தேர்தல் முடிவுகள் அறிவித்த பிறகு, பொறியாளர்கள் குழுவால் சரிபார்க்கப்பட வேண்டும். இந்த பணியை ஏழு நாட்களுக்குள் செய்ய வேண்டும். ஒப்புகைச் சீட்டு விவகாரத்தில் தற்போது 5 சதவீதம் மட்டும் சரிபார்க்கப்படுகிறது. தற்போதுள்ள சூழலில் அதுவே தொடர்ந்து நீடிப்பதை நாங்கள் உறுதி செய்கிறோம்.

இதைத்தவிர இந்திய தேர்தல் ஆணையத்துக்கு ஒரு கோரிக்கையை வைக்கிறோம். அதாவது, வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை எண்ணும் மின்னணு இயந்திரம் மற்றும் சின்னத்துடன் ஒவ்வொரு கட்சிக்கும் பார்கோட் அமைக்க முடியுமா என்பதை தேர்தல் ஆணையம் விரைந்து ஆய்வு செய்ய வேண்டும். குறிப்பாக தற்போது நடந்து வரும் தேர்தலிலேயே சின்னங்களை பொருத்தும் இயந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும். அதாவது மே 1ம் தேதி முதல் வாக்குப்பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் பாதுகாக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

அதேபோன்று வாக்கு இயந்திரங்கள் வைக்கும் ஸ்ட்ராங் அறைகளிலேயே, சின்னங்கள் பொருத்தும் இயந்திரங்களும் வைக்கப்பட வேண்டும். இதில் நூறு சதவீதம் ஒப்புகைச் சீட்டை எண்ண வேண்டும் என்பதையும், அதேபோன்று மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கை ஆகிய அனைத்தையும் நிராகரிக்கிறோம்” என்று தெரிவித்த நீதிபதி, ஒப்புகைச் சீட்டு இயந்திரத்தை முழுமையாக எண்ணக் கோரி தொடரப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதையடுத்து நீதிபதி திபங்கர் தத்தா வழங்கிய உத்தரவில், ‘‘தேர்தல் ஆணையம் என்ற ஒரு தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்பு. இந்த அமைப்பை கண்மூடித்தனமாக அவநம்பிக்கையுடன் பார்ப்பது தேவையற்ற சந்தேகங்களுக்கு வழிவகுக்கும். இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் மற்றும் தொழில்நுட்ப அதிகாரிகள் கொடுத்த விளக்கத்தை நாங்கள் ஏற்கிறோம். அதனை அடிப்படையாக கொண்டே இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரத்தில் சின்னம் ஏற்றும் செயல்முறை முடிந்ததும், சின்னம் ஏற்றும் அலகு சீல் செய்யப்பட்டு அதற்கான அமைப்புகளில் பாதுகாக்கப்பட வேண்டும்.

வேட்பாளர்களும் அவர்களது பிரதிநிதிகளும் கோப்புகளில் கையெழுத்திடலாம். பின்னர் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு குறைந்தது 45 நாட்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட வேண்டும்” என்று தெரிவித்தார். இதைதொடர்ந்து ஒப்புகைச் சீட்டு இயந்திரம் தொடர்பான வழக்குகள் அனைத்தையும் நீதிபதிகள் முடித்து வைத்தனர். உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பால் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் ஒப்புகை சீட்டு இயந்திரம் ஆகியவற்றின் மீது இருந்த நம்பகதன்மை உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த வழக்கில் நீதிபதிகள் இருவரும் தனித்தனியாக தீர்ப்புகளை வழங்கினாலும், ஒருமித்த கருத்து கொண்ட தீர்ப்புகளையே வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

* சின்னம் பதிவேற்றும் செயல்முறை முடிந்ததும், சின்னம் ஏற்றும் அலகு சீல் செய்யப்பட வேண்டும்.
* முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு குறைந்தது 45 நாட்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட வேண்டும்.
* 100% ஒப்புகைச் சீட்டை எண்ண உத்தரவிட முடியாது.
* மீண்டும் வாக்குச்சீட்டு முறைக்கு மாற வேண்டும் என்ற கோரிக்கையை நிராகரிக்கிறோம்.

* இயந்திரங்களை சரிபார்க்க வேட்பாளர்கள் கோரலாம்
நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் நீதிபதிகள் வேட்பாளர்களுக்கு ஒருசில முக்கிய சலுகைகளை வழங்கியுள்ளனர். அதில், ‘‘தேர்தல் முடிவுகளில் இரண்டு மற்றும் மூன்றாம் இடம் பெறும் வேட்பாளர்கள் இயந்திரங்களை சரி பார்க்க வேண்டும் என்று விண்ணப்பிக்கலாம். அதாவது தேர்தல் முடிவுகள் அறிவிகப்பட்ட ஏழு நாட்களுக்குள் எழுத்துப்பூர்வ கோரிக்கையாக வேட்பாளர்கள் வைக்க வேண்டும். இதையடுத்து கோரிக்கைக்கு பின்னர் மின்னணு இயந்திர தயாரிப்பு குழுவில் இடம்பெற்று இருக்கும் பொறியாளர்கள் அதனை பரிசோதனை செய்வார்கள். இதில் சரிபார்க்க வேண்டிய இயந்திரங்களை வாக்குச்சாவடி வரிசை எண்களின் மூலமாக வேட்பாளர்கள் அதனை அடையாளம் காண வேண்டும். பொறியாளர்கள் சோதனையின் போது வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் பிரதிநிதிகள் உடன் இருக்கலாம். மேலும் இதற்கான செலவுகளை கோரிக்கை வைக்கும் வேட்பாளர்களிடம் இருந்து வசூலிக்க வேண்டும். ஒருவேளை இயந்திரங்களில் முறைகேடு கண்டறியப்பட்டால் வேட்பாளர் கட்டிய செலவுத்தொகையை திருப்பி தர வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

* 40 முறை கோர்ட்டுகளில் தள்ளுபடி
உச்ச நீதிமன்ற தீர்ப்பு தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேற்று கூறியதாவது: எலக்ட்ரானிக் வாக்குபதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த உயர்நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்றத்தில் 40 முறை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ள தரவுகளின் அடிப்படையில், வாக்குபதிவு இயந்திரங்களை பயன்படுத்தி நடந்த தேர்தல்களில் பல முறை ஆளும் கட்சி கூட தோல்வி கண்டுள்ளன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

You may also like

Leave a Comment

five × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi