திருப்பூர்: பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தை சேர்ந்தவர் மோகன்ராஜ் (49). இவர் தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார். பொங்கலூர் மேற்கு ஒன்றியம் மாதப்பூர் பஞ்சாயத்து பாஜ கிளை தலைவராகவும் இருந்தார். இவரது நிலத்தில் நேற்று முன்தினம் இரவு 3 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். அவர்களை மோகன்ராஜ் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த 3 பேரும் மோகன்ராஜின் வீட்டிற்கு சென்று, மோகன்ராஜ், அவரது பெரியப்பா மகனான செந்தில்குமார், தாய் புஷ்பவதி (68), சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகிய 4 பேரையும் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பினர்.
இதுகுறித்து பல்லடம் போலீசார் 5 தனிப்படைகள் அமைத்து விசாரித்தனர். இதில் நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்ற செல்வம் (27), அவரது நண்பர்கள் திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து (24), தேனி மாவட்டம் உத்தமாபாளையத்தை சேர்ந்த சோனை முத்தையா (22) ஆகியோர் கொலை செய்தது தெரிய வந்தது. இவர்களில் செல்லமுத்து கைது செய்யப்பட்டார். வெங்கடேஷ், சோனை முத்தையா ஆகியோரை தேடி வருகிறார்கள். மோகன்ராஜ் தனது உணவகத்தை வேறு ஒரு நபருக்கு வாடகைக்கு கொடுத்திருந்தார். அவர் வெங்கடேஷின் கடையில் கறி வாங்கி கடன் வைத்துள்ளார்.
கடனை வசூலிக்கும் வகையில் உணவகத்துக்கு சென்ற வெங்கடேஷ் அங்ருந்த சிலிண்டர்கள் மற்றும் கோழிக்கூண்டுகளை எடுத்து சென்றுள்ளார். இந்த வகையில் மோகன்ராஜூக்கும், வெங்கடேஷூக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. மேலும் செந்தில்குமாரிடம் வெங்கடேஷ் 2 மாதங்களாக டிரைவராக வேலை செய்துள்ளார். பிரச்னை காரணமாக அவர் வேலையைவிட்டு நீக்கியதாக தெரிகிறது. இந்நிலையில்தான் மோகன்ராஜூக்கு சொந்தமான இடத்தில் வெங்கடேஷ் உள்ளிட்ட 3 பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறை தொடர்ந்தே இந்த படுகொலை சம்பவம் நடந்துள்ளது. இதனிடையே படுகொலை செய்யப்பட்ட 4 பேர் குடும்பத்துக்கும் தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.