சென்னை: ஆலந்தூர் பாலகிருஷ்ணாபுரம் மற்றும் மாதவரம் சாஸ்திரி நகர் மயான பூமிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், மூடப்படுவதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டலம், கோட்டம்-163, பாலகிருஷ்ணாபுரம் மயான பூமியின் எரிவாயு தகன மேடையினை சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் திரவ பெட்ரோலிய தகன மேடையாக மாற்றம் செய்திடவும், பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளதாலும் நாளை முதல் ஜூலை 10 வரை 2 மாத காலத்திற்கு மூடப்படுகிறது. எனவே, மேம்பாடு மற்றும் பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வார்டு-162க்குட்பட்ட கண்ணன் காலனி மயான பூமியினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
இதேபோல், சென்னை மாநகராட்சி, மாதவரம் மண்டலம், வார்டு-27, சாஸ்திரி நகர் மயானபூமியில் உள்ள திரவ பெட்ரோலிய தகன மேடை மற்றும் புகைபோக்கியில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் வரும் நாளை முதல் 25ம் தேதி வரை 15 நாட்களுக்கு மயானபூமி இயங்காது. எனவே, பராமரிப்பு பணிகள் நடைபெறும் நாட்களில் பொதுமக்கள் அருகிலுள்ள மணலி மண்டலத்திற்குட்பட்ட எம்.ஜி.ஆர். நகர் மயான பூமி மற்றும் மாதவரம் மண்டலத்திற்குட்பட்ட தெலுங்கு காலனி மயானபூமிகளை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.