Thursday, May 16, 2024
Home » நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை

நெல்லை, தென்காசி மாவட்டத்தில் பக்ரீத் சிறப்பு தொழுகை

by Lakshmipathi

நெல்லை : தென்காசி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பக்ரீத் பண்டிகையையொட்டி சிறப்புத் தொழுகை நடந்தது. இதில் திரளாகப் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கு ஒருவர் பெருநாள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.ஏர்வாடி: நெல்லை மாவட்டம், ஏர்வாடியில் பக்ரீத் பண்டிகையை இஸ்லாமியர்கள் விமரிசையாக கொண்டாடினர். இதையொட்டி பைத்துஸ்ஸலாம் பள்ளியில் பெண்களுக்கான சிறப்பு தொழுகை காலை 6.30 மணிக்கு நடந்தது.

இதேபோல் ஐக்கிய ஜமாத் சார்பில் ஈத்கா மைதானத்தில் காலை 7 மணிக்கு ஆண்களுக்காக இமாம் அன்சாரி சிறப்பு தொழுகை நடத்தி மார்க்க சொற்பொழிவு ஆற்றினார். ஏர்வாடி அணைக்கரை தக்வா திடலில் தமுமுக சார்பில் சிறப்பு தொழுகையை மாநில செயற்குழு உறுப்பினர் உசைன் மன்பஇ நடத்தினார். கட்டளைத்தெரு, லெப்பை வளைவு பள்ளிவாசல், ராணிமெட்ரிக் பள்ளி ஆகிய இடங்களில் நடந்த சிறப்பு தொழுகையில் திரளாகப் பங்கேற்ற இஸ்லாமியர்கள் ஒருவருக்கொருவர் கட்டி ஆரத்தழுவி வாழ்த்துக்களை பரிமாறி கொண்ட பின்னர் ஏழைகளுக்கு ஆடு, மாட்டிறைச்சிகளை குர்பானியாக வழங்கினர்.

களக்காடு: களக்காடு காவல் நிலையம் அருகேயுள்ள திடலில் பக்ரீத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு தொழுகையில் கோட்டை ஜமாத், வியாசராஜபுரம் ஜமாத், கோவில்பத்து ஜமாத், சிங்கம் பத்து ஜமாத் பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். பின்னர் தங்களது வீடுகளில் வளர்க்கப்பட்ட ஆடுகளை குர்பானி கொடுத்தனர். ஏற்பாடுகளை கோட்டை ஜமாத் இளைஞர்கள் செய்திருந்தனர்.

அம்பை: அம்பை, கல்லிடைக்குறிச்சியில் பக்ரீத் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி அம்பாசமுத்திரம் ஜாமியா பள்ளிவாசல், முகைதீன் கீழப்பள்ளிவாசல், தவ்ஹீத் பள்ளி ஆகிய இடங்களில் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தினர். பின்னர் ஒருவருக்கு ஒருவர் ஆரத்தழுவி வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். கல்லிடைக்குறிச்சியில் பெரிய ஜும்ஆ பள்ளிவாசல், ரஹ்மத் ஜும்ஆ பள்ளிவாசல் சின்னப்பள்ளிவாசல், தெற்கு தெரு மதரசா, சத்திரம் தெரு பள்ளிவாசல், பட்டாரியர் தெரு பள்ளிவாசல், தவ்ஹீத் திடல், நெசவாளர் காலனி பள்ளிவாசல் ஆகிய இடங்களிலும் தொழுகை நடந்தது.

இதில் ஆயிரக்கணக்கான பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்றனர். தொழுகைக்கு பிறகு ஒருவருக்கு ஓருவர் ஆரத்தழுவி பக்ரீத் பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து கொண்டனர். அம்பாசமுத்திரம் சுற்று வட்டார பகுதிகளில் பக்ரீத் பண்டிகையை ஒட்டி தனி நபர் குர்பானிக்காக 1000க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளும், கூட்டு குர்பானிக்காக 50க்கும் மேற்பட்ட மாட்டிறைச்சி ஏழை மக்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

தென்காசி: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் தென்காசி மாவட்ட மேற்கு கிளை சார்பில் ஹஜ் பெருநாள் தொழுகை தென்காசியில் உள்ள நேரு மேல்நிலைப்பள்ளி திடலில் நடந்தது. தலைமை வகித்து தொழுகை நடத்திய மாவட்டத் தலைவர் அப்துஸ் ஸலாம், பெருநாளின் சிறப்புகளை எடுத்துரைத்தார். இதில் பெண்கள், குழந்தைகள் என திரளானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மேற்கு கிளை நிர்வாகிகள் தலைவர் மைதீன், செயலாளர் செய்யது பாஷா, பொருளாளர் செய்யது அலி, மற்றும் சுல்தான், நவாஸ், ஜலால், அஜீஸ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தென்காசி கிழக்கு கிளை சார்பாக நடந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணைச் செயலாளர் ஜலாலுதீன் பெருநாள் சொற்பொழிவு நிகழ்த்தினார். கிழக்கு கிளை நிர்வாகிகள் தலைவர் ராஜா முகமது, செயலாளர் முகமது சித்திக், பொருளாளர் அப்துல் ஹமீத், துணைத் தலைவர் முகமது அலி, துணைச் செயலாளர் பக்கீர் மைதீன், மருத்துவர் அணி செயலாளர் முகமது இஸ்மாயில், மாணவரணி செயலாளர் அன்வர், தொண்டரணி செயலாளர் ஆதில் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

இதே போல் வல்லத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் சார்பில் நடந்த சிறப்பு தொழுகையில் திரளானோர் பங்கேற்ற நிலையில் மாவட்ட பேச்சாளர் வல்லம் அகமது சிறப்புரை ஆற்றினார். தொழுகைக்கான ஏற்பாடுகளை கிளை பொறுப்பாளர் அக்பர் அலி, திவான் ஒலி, அனஸ், செய்யது மசூது, மைதீன் பாவா, செய்யது சுலைமான் செய்திருந்தனர்.

கடையநல்லூர்: கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் 9 இடங்களில் நடந்த சிறப்பு தொழுகைகளில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். பேட்டை கிளை சார்பில் மர்க்கஸுந் நூர் தவ்ஹீத் திடலில் தாஹா, ரஹ்மானியாபுரம் மர்யம் பள்ளி திடலில் அப்துர் ரஹ்மான் பிர்தவ்ஸி, மக்காநகர் தவ்ஹீத் திடலில் முகைதீன் அல்தாபி, தவ்ஹீத் நகர் முஜாஹித் பாத்திமா நகர் பள்ளி திடலில் அபூதல்ஹா, இக்பால் நகர் ரய்யான் திடலில் ரய்யான்மைதீன், மஹ்மூதாநகர் ரபீக் ராஜா, மதினா நகர் பள்ளி திடலில் அப்துல் அஜீஸ் என நகரில் 9 இடங்களில் நடந்தது.
பாதுகாப்பு ஏற்பாடுகளை தாசில்தார் கங்கா மேற்பார்வையில் புளியங்குடி டிஎஸ்பி அசோக் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜா, எஸ்ஐ கருப்பசாமி மற்றும் போலீசார் செய்திருந்தனர்.

கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பில் மூன்று இடங்களில் சிறப்பு தொழுகை நடந்தது. மஸ்ஜித் முபாரக் பள்ளிவாசல் முன்புள்ள பஜார் திடலில் மஸ்ஜித் முபாரக் ஜமாத் தலைவர் ஸைபுல்லாஹ் ஹாஜா தொழுகை நடத்தி மக்களுக்கு குத்பா பிரசங்கம் செய்தார். இதே போல் கலந்தர் மஸ்தான் தெருவில் உள்ள பாத்திமா நகர் மஸ்ஜித் தக்வா திடலில் பஷிர் அஹ்மத் உமரியும், மக்கா நகர் மஸ்ஜித் ஆயிஷா திடலில் ஆசிரியர் ரஹ்மத்துல்லா, பேட்டை மஸ்ஜித் அக்ஸா திடலில் முஹிப்புல்லாஹ் உமரி தொழுகை நடத்தி குத்பா பிரசங்கம் செய்தனர்.

தொழுகையில் மஸ்ஜித் முபாரக் கமிட்டி தலைவர் சேக் உதுமான், செயலர் முஹம்மது காசீம் என்ற சின்ஸா, பொருளாளர் அப்துல் மஜீத், ஜபருல்லா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
கடையம்: பொட்டல்புதூர் ஜமாலிய தொடக்கப்பள்ளி மைதானத்தில் தவ்ஹீத் ஜமாத் கிளை சார்பில் சிறப்பு தொழுகை நடந்தது. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். இதையொட்டி மாவட்ட பொருளாளர் செய்யது அன்வர் சாதிக் சிறப்புரை ஆற்றினார்.

இதனிடையே தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடையம் அருகேயுள்ள முதலியார்பட்டி மர்கஸ் தெருவில் நடந்த சிறப்பு தொழுகையில் அஷ்ரம் பெருநாள் சொற்பொழிவு ஆற்றினார். இதில் பங்கேற்ற கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானோர் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி பெருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பரிமாறிக்கொண்டனர்.புளியங்குடி: புளியங்குடி மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசல் சார்பில் நியூ கிரஸன்ட் ஸ்கூல் அருகேயுள்ள மைதானத்தில் நடந்த சிறப்பு தொழுகைக்கு ஜமாத் தலைவர் அப்துர் ரஹ்மான் தலைமை வகித்தார்.

இமாம் மவுலவி அப்துல் மஜீத் பைஜி பெருநாள் தொழுகை நடத்தியதை தொடர்ந்து இஸ்லாமிய அழைப்பாளர் மவுலவி முகமது ரிபாஸ் பிர்தவுஸி பெருநாள் குத்பா உரை ஆற்றினார். இதில் பள்ளிவாசல் செயலாளர் சமாதானியா சாகுல், பொருளாளர் மைதீன் பாதுஷா, இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) கல்லூரித் தாளாளர் காஜாமுகைதீன், தாருல் ஹிக்மா மக்தப், ஹிப்ளு மதரஸா பொறுப்பாளர் பஷீர் ஒலி, துணைத் தலைவர் ஆட்டோ மைதீன், துணைச் செயலாளர்கள் சாகுல் ஹமீது, ஹைதர் அலி, தமுமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் முகமது அலி, மமக மாவட்ட துணைச்செயலாளர் அப்துல் மஜீத், தமுமுக நகரத் தலைவர் செய்யது அலி பாதுஷா, நகரச்செயலாளர் அசன், மமக நகரச்செயலாளரும், 26வது வார்டு கவுன்சிலருமான முகைதீன், நகர பொருளாளர் முகைதீன், துணைத்தலைவரும், 13வது வார்டு கவுன்சிலருமான அப்துல் காதர், துணைச் செயலாளர்கள் மட்டன் செய்யது, ஷேக் செய்யது அலி, ஆர்எஸ் உசேன், செயற்குழு உறுப்பினர்கள் எம்எஸ் ஹமீது, ஜாபர் அலி உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.

வள்ளியூர்: வள்ளியூரில் செயல்படும் மரியா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடந்த பக்ரீத் கொண்டாட்ட நிகழ்ச்சிக்கு கல்லூரியின் நிறுவனத்தலைவர் லாரன்ஸ், தாளாளர் ஹெலன் லாரன்ஸ் தலைமை வகித்தனர். தமிழ்த்துறை உதவிப் பேராசிரியை லலிதா வரவேற்றார். கல்லூரி முதல்வர் கிளாடிஸ் லீமா ரோஸ் பக்ரீத் பண்டிகையின் சிறப்புகளை எடுத்துரைத்தார். இதைத்தொடர்ந்து மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. 2ம் ஆண்டு ஆங்கிலத்துறை மாணவி ஹபீபா பேகம் நன்றி கூறினார்.

You may also like

Leave a Comment

5 + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi