காஜிபூர்: உத்தர பிரதேசத்தில் பிரபல ரவுடியான முக்தர் அன்சாரி மற்றும் அவரது சகோதரரும் பகுஜன் சமாஜ் எம்பி.யுமான அப்சல் அன்சாரி மீது கடந்த 2007ம் ஆண்டு குண்டர்கள் சட்டத்தின் கீழ் கோட்வாலி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் கடந்தாண்டு செப்டம்பரில் தான் அவர்கள் மீதான முதல் கட்ட குற்றச்சாட்டுகள் பதியப்பட்டன. இதைத் தொடர்ந்து, மாவ் சதார் தொகுதியில் சுகல்தேவ் பாரதீய சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு 5 முறை தொடர்ந்து எம்எல்ஏ.வாக இருந்த முக்தார் அன்சாரி, தற்போது பாண்டா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது சகோதரர் அப்சல் அன்சாரி பகுஜன் சமாஜ் சார்பில் காஜிபூர் மக்களவை தொகுதி எம்பி.யானார்.
இந்நிலையில், இந்த வழக்கில் இருவரும் நேற்று எம்பி-எம்எல்ஏ.களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி துர்கேஷ் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டனர். அப்போது நீதிபதி, எம்பி. அப்சல் அன்சாரிக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை மற்றும் ரூ.5லட்சம் அபராதமும், முன்னாள் எம்எல்ஏ. முக்தார் அன்சாரிக்கு 10 ஆண்டு சிறை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். அப்சல் அன்சாரியின் தண்டனை காலம் 2 ஆண்டுகளுக்கு மேல் இருப்பதால் அவர் எம்பி பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.