Friday, May 3, 2024
Home » பச்சிளங் குழந்தைக்கான உணவுமுறை!

பச்சிளங் குழந்தைக்கான உணவுமுறை!

by Nithya
Published: Last Updated on

நன்றி குங்குமம் டாக்டர்

ஒரு மருத்துவ ரிப்போர்ட்!

பிறந்தது முதல் 1 வருடம் வரை அசுர வளர்ச்சிக் காணப்படும் பருவம், இளங்குழவிப் பருவம். ஒரு மனிதனின் வாழ்க்கையில் இளங்குழவி பருவம் தவிர வேறெந்தப் பருவத்திலும் வேகமான வளர்ச்சியைப் பார்க்க முடியாது.

உடல் வளர்ச்சியும், முன்னேற்ற

மும்பிறந்த குழந்தையின் உடல் எடை 2.5 கி.கி. உடல் வளர்ச்சியும், முன்னேற்றமும் பல உடலியல் மாற்றங்களை உள்ளடக்கியது. அவை பின்வருமாறு :

உடல் பரிமாணங்களில் ஏற்படும் மாற்றம்

ஒரு சாதாரண, ஆரோக்கியமான இளங்குழவியின் பிறப்பு (birth Weight) ஒரு வருடத்தில் மூன்று மடங்காகவும் கூடுகிறது. அதே போல் இளங்குழவியின் உடல் நீளம், பிறக்கும் போது இருந்த 50-55 செ.மீ லிருந்து ஒரு வருட முடிவில் 75 செ.மீ ஆக அதிகரிக்கிறது. உடலின் நீளத்திற்கு ஏற்ப உடல் அளவுகளிலும் மாற்றம் ஏற்படுகிறது. குழந்தைக்கு இரண்டு வயது ஆகும் போது, குழவியின் தலைசுற்றளவு அதனுடைய முழு வளர்ச்சியில் 2/3 பங்கு வளர்ந்து முற்றுப்பெற்றிருக்கும். குழவியின் மார்பு சுற்றளவும் அதிகரித்திருக்கும்.

உடல் ஆக்கப் பொருட்களில் ஏற்படும் மாற்றங்கள்

தசை உறுப்பு திசுக்கள், எலும்புத் திசுக்கள் மற்றும் எலும்பு அமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சி, உடல் எடையை அதிகரிக்கச் செய்கிறது. பிறந்த இளங்குழவியின் உடலில் நீரின் அளவு 75 சதவீதம் அளவுக்கு அதிகமாகவும், 12-15 சதவீதம் கொழுப்பும் மற்றும் முழு வளர்ச்சியற்ற தசைகளும் காணப்படும்.

ஒரு வருடம் ஆன பிறகு நீரின் அளவு

60 சதவீதமாக குறைகிறது. கொழுப்பின் அளவு 24 சதவீதமாக அதிகரிக்கின்றது. அதற்கேற்றாற் போல் எலும்புகளுடன் இணைந்த தசைகளின் பருமனும் குறைகிறது. எலும்புகளில் தாதுஉப்புக்கள் படிவது ஆரம்பித்து, குழந்தை பருவத்தில் தொடர்ந்து, குமர பருவம் வரை நீடிக்கிறது.

உணவுக் குழாய் மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள்

முழு வளர்ச்சியுடன் பிறந்த இளங்குழவியால் எளியப் புரதங்களையும், சிறு திவலைகள் கொண்ட கொழுப்பையும் (emulsified fat) மற்றும் எளிய கார்போஹைட்ரேட்டுகளையும் சீரணித்துக் கொள்ள முடியும். முதல் சில மாதங்களில் உமிழ்நீர் சுரத்தலும், வயிற்றில் அமிலம் சுரத்தலும் குறைவாக இருக்கும். குழந்தை வளர வளர சீரணிக்கும் தன்மை மேன்மையடைந்து ஒரு வருட முடிவில் அனைத்து வகை உணவுகளையும் குழந்தையால் சீரணித்துக் கொள்ள முடியும்.

கழிவு நீக்கு மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள்

ஒரு வருட முடிவில்தான், சிறுநீரகங்கள் முழுமையாக செயல்படும் திறனை அடைகின்றன. ஆரம்ப மாதங்களில் (glomerular filteration rate) குறைவாக இருக்கும் இதனால் அடர்த்தியான கரைபடு பொருட்களை வெளியேற்றுவது கடினம்.

மூளை வளர்ச்சி

குழந்தை பிறந்தவுடன், 5 முதல் 6 மாதங்களுக்கு மூளை செல்களின் எண்ணிக்கை மிக வேகமாக அதிகரிக்கும். அதற்குப் பிறகு இரண்டு வயது வரை எண்ணிக்கை அதிகரித்தாலும், அதிகரிக்கும் விகிதம் குறைவாகக் காணப்படும்.

இருதய சுற்றோட்ட மண்டலத்தில் ஏற்படும் மாற்றங்கள்

இளங்குழந்தையின் இதய துடிப்பு மிக அதிகமாக இருக்கும். ஒரு நிமிடத்திற்கு 120-140 முறைத் துடிக்கும். ஹீமோகுளோபினின் அளவு, குழந்தை பிறந்தவுடன் 18-22 கிராம்/100 மி.லி ஆக இருக்கும். இந்த அளவு, பிறந்தது முதல் 4 – 6 மாதங்களுக்கு இரத்தத்தின் கனஅளவை அதிகரிக்கத் தேவையான சேமிப்பையும், வளரும் திசுக்களுக்குப் போதுமான ஆக்ஸிஜனை எடுத்துச் செல்லும் திறனைக் கொடுப்பதற்கும் போதுமானதாக இருக்கும்.

இளங்குழுவியிடம் முதல் உணவுப் பழக்கம் ஏற்படும் விதம்

தசைகளின் ஒருங்கிணைக்கும் நரம்பு மண்டலம் முதிர்ச்சி அடைவதால், இளங்குழவிகள் பால் குடிக்கும் முறையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. குழந்தைப் பிறந்தவுடன் குழவியால் உறிஞ்சுதல், விழுங்குதல் மற்றும் மூச்சுவிடுதல் ஆகிய மூன்று செயல்களையும் ஒருங்கிணைக்க முடியும். குழந்தையால் கண்களை நிலை நிறுத்தி, பார்வையால் உணர முடியாவிட்டாலும், உணவு கிடைக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க முடியும். முதல் மூன்று மாதங்கள் வரை குழந்தை, நாக்கை மேலும் கீழும் அசைத்து பாலை உறிஞ்சுகிறது. மேலும் ஏதேனும் திட உணவு வாயில் தென்பட்டால், உடனடியாக அதை நாக்கு, வெளியே தள்ளும் இயல் நரம்பியக்கம் (extrusion reflex) காரணமாக வெளியே தள்ளிவிடுகிறது. 3-4 மாதங்களுக்குப் பிறகு, நாக்கின் அசைவுகள் மாறி, குழந்தையினால் உணவை விழுங்க முடியும். ஆறு மாதத்திற்குப் பிறகு உணவை மெல்லும் அசைவுகளும் வளர்ச்சியடைகிறது.

வளர்ச்சியைக் கண்காணித்தல்

மேலே குறிப்பிட்ட அனைத்து உடல் வளர்ச்சி மாற்றங்களும் மிக வெளிப்படையாகத் தெரிந்தாலும், வளர்ச்சிக் கண்காணிப்பு மட்டுமே, ஒரு குழந்தையின் வளர்ச்சியை திருப்திகரமாகவும், துல்லியமாகவும் மதிப்பீடு செய்யும். வளர்ச்சி கண்காணிப்பு எனப்படுவது வளர்ச்சியை சீராக அளவிடுவது ஆகும். இது வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின்மையை நேரிடையாக உணர உதவுகிறது. மேலும் ஒரு வளர்ச்சி கண்காணிப்பானது, குழந்தையின் சீரான வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை உறுதிபடுத்தக் கூடிய, குறிப்பிட்ட தேவையான, நடைமுறையில் பின்பற்றக் கூடிய வழிகாட்டுதலைப் பெற வழிவகுக்கிறது. வளர்ச்சிக் கண்காணிப்பைப் பலமுறைகளில் செய்யலாம். ஆனாலும் அவற்றுள் குழந்தை வளர்ச்சி அட்டை (Growth chart) உபயோகிப்பது தான் மிகவும் சிறந்த முறையாகும்.

நோய் தடுப்பூசி போடுதல்

இளங்குழவிப் பருவத்தில் ஏற்படும் ஊட்டச்சத்துக் குறைவு அதிக அளவு சிசு மரண விகிதம் (infant mortality) ஏற்பட வழி வகுக்கிறது. ஊட்டச்சத்து குறைவுத்தவிர அதனுடன் வேறு பிற காரணங்களும் சேர்ந்து மரணத்தை ஏற்படுத்துகிறது. தொற்று நோய்களும் இதில் முக்கிய பங்கை வகிக்கின்றன. எனவே குழந்தைகளை இந்நோய்களிலிருந்துக் காப்பாற்ற நோய்தடுப்பூசிப் போடுவது அவசியம்.

குழந்தைப் பிறந்து ஓராண்டுக்குள், பல்வேறு மாதங்களில் போடப்படும் தடுப்பூசிகள், குழந்தைக்கு வாழ்க்கை முழுவதும், ஆறு அபாயகரமான நோய்களிலிருந்து நோய் தடுப்பை ஏற்படுத்துகிறது. காசநோய், போலியோ, தொண்டை அடைப்பான் மற்றும் தட்டம்மை ஆகியவையே அந்த ஆறு அபாயகரமான நோய்கள் ஆகும். எனவே நோய் தடுப்பூசி என்பது ஊட்டச் சத்து குறைவானக் குழந்தைகளுக்கு மட்டுமல்லாது, அனைத்துக் குழந்தைகளுக்கும் தேவைப்படும் ஒன்றாகும்.

ஊட்டச்சத்துத் தேவைகள்

இளங்குழவிப் பருவத்தில் வளர்ச்சி மிகவும் வேகமாக இருப்பதால் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியது மிகவும் முக்கியம். இளங்குழவியின் ஊட்டச்சத்து தேவைகள் தாய்ப்பாலில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு நன்றாக ஊட்டம் பெற்ற தாயிடம் பால் குடித்தல் மற்றும் 4-5 மாதங்களுக்குப் பிறகு தாய்ப்பால் போதாமல் போகும்போது இணை உணவு கொடுக்கும் போது அதிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டது. இளங்குழவிகளுக்கான ஊட்டச் சத்துக்களின் அளவுகள் கொடுக்கப்பட்டுள்ளது.

சக்தி

ஒரு ஊட்டச்சத்து மிகுந்த தாய்க்கு, ஒரு நாளில் சுரக்கும் பாலின் அளவான 850 மி.லி யை அடிப்படையாகக் கொண்டு இளங்குழவியின் சக்தித் தேவைகள் கணக்கிடப்படுகிறது. கிடைக்கும் சக்தியில் 50 சதவிகிதம் அடிப்படை வளர்சிதை விகிதத்திற்குப் பயன்படுகிறது. 25 சதவீதம் செயல்பாடுகளுக்காகவும், 25 சதவிகிதம் வளர்ச்சிக்கும் பயன்படுகிறது.

அதிக துறுதுறுப்பான குழந்தைகள், அதிக சக்தியை செயல்பாட்டில் செலவிட்டு விடுவதால் அவர்களுக்கு கூடுதல் கலோரிகள் கொடுத்தாலன்றி உடல் எடை அதிகரிக்காது. ஆறு மாதங்களுக்குப் பிறகு, தாய்ப்பால் சக்தி தேவைகளை 70 சதவிகிதம் மட்டுமே பூர்த்தி செய்வதால், இணை உணவுகள் கொடுப்பது அவசியமாகிறது.

புரதம்

உடலைப் பராமரிப்பதற்கு மட்டுமின்றி, வேகமான எலும்பு மற்றும் தசை வளர்ச்சியையும் சமாளிக்க ஏற்ற வகையில் புரதத்தின் அளவு அமைய வேண்டும். தாய்பாலிலேயே சரியான உடல் வளர்ச்சிக்கு முக்கியமான அனைத்து அமினோ அமிலங்களும் உள்ளன. முதல் 6 மாதங்களில் இவர்களுக்குத் தேவையான புரதத்தின் அளவு 2 கிராம்/கி.கி உடல் எடை ஆறு மாதங்களுக்குப் பிறகு கலோரிகள் போலவே புரதத் தேவையும் குறைகிறது. ஆறு மாதங்களுக்குப் பிறகு புரதம் தேவைப்படும் அளவு 165 கிராம்/ கி.கி உடல் எடை ஆகும். அப்போது தேவையான புரதம் தாய்ப்பாலிலிருந்தும், தாவரப் புரதத்திலிருந்தும் ஈடு செய்யப்பட வேண்டும்.

கொழுப்பு

போதுமான தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு தினசரி 30 கிராம் கொழுப்பு கிடைக்கிறது. அதில் 10 சதவிகிதம் லினோலியிக் அமிலமும், 1 சதவிகிதம் லினோலெனிக் அமிலமும் அடங்கும். தாய்ப்பால் முக்கிய கொழுப்பு அமிலங்களில் தேவைகளையும் பூர்த்தி செய்யக் கூடியது. போதிய தாய்ப்பால் கிடைக்காதபோது அல்லது தாய்ப்பால் அறவே இல்லாமல் போகும்போது, கொடுக்கப்படும் மாற்று உணவுகள் தாய்ப்பாலில் உள்ளது போல கொழுப்புச்சத்து அளிப்பதாகவும், 5-6 சதவிகிதம் சக்தி, முக்கிய கொழுப்பு அமிலங்களிலிருந்து கிடைக்கும்படியும் உறுதி செய்ய வேண்டும்.

தாய்ப்பால் நிறுத்தும் நேரத்தில் (weaning) கொடுக்கப்படும் திட்ட உணவில் 25 சதவிகிதம் சக்தி, கொழுப்பிலிருந்து கிடைக்க வேண்டும். அந்த கொழுப்பும் கண்ணுக்கு புலப்படும் மற்றும் புலப்படாத கொழுப்புகளின் கலவையாக இருக்க வேண்டும்.

கால்சியம்

பிறந்தது முதல் ஆறு மாதங்களுக்கு, குழந்தை தாய்ப்பாலையே முழுமையாக குடிப்பதால் 300 மிகி கால்சியம் நாளொன்றுக்கு போதுமானது. தாய்ப்பாலில் கிடைக்கும் கால்சியத்திலிருந்து பெரும்பகுதியை, குழந்தை தக்க வைத்துக் கொள்கிறது. குழந்தை வளர வளர எலும்புகளில் கால்சியம் படிவது அதிகரிக்கிறது. எலும்புகளில் கால்சியம் படிந்தால்தான், குழந்தை நடக்க ஆரம்பிக்கும் போது உடல் எடையை அதன் எலும்புகளால் தாங்க முடியும். எனவே தான் இளங்குழவி பருவம் முழுவதும் நாளொன்றுக்கு 500 மி.கி கால்சியத்தை ICMR பரிந்துரை செய்துள்ளது.

தொகுப்பு : சரஸ்

You may also like

Leave a Comment

ten − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi