புதுடெல்லி: 11, 12ம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகங்களில் குஜராத் கலவரம், பாபர் மசூதி இடிப்பு, இந்துத்துவா தொடர்பான பாடப்பகுதிகளை என்.சி.இ.ஆர்.டி நீக்கி உள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தில், அயோத்தியில் பாபர் மசூதி இடிப்பு, குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு கலவரங்களில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டது மற்றும் இந்துத்துவா தொடர்பான பாடங்களை கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில்(என்.சி.இ.ஆர்.டி) நீக்கி உள்ளது.
மேலும் 11ம் வகுப்பு பாடப்புத்தகத்தில் மதசார்பின்மை என்ற தலைப்பிலான பாடம் அத்தியாயம் 8ல், சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் குறித்து கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் எந்த கருத்தையும் வௌியிடவில்லை. ஆனால் இந்த மாற்றங்கள் வழக்கமான நடவடிக்கை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.