சென்னை: பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு 94,939 பேரும், கலை, அறிவியல் படிப்புகளுக்கு 1,26,151 பேரும் இதுவரை விண்ணப்பித்துள்ளனர். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த 6ம் தேதி வெளியானது. இதைத்தொடர்ந்து அன்றைய தினமே பி.இ., மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நடப்பு கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப பதிவு ஆன்லைன் மூலம் தொடங்கியது. அதன்படி, பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு நேற்று மாலை நிலவரப்படி 94 ஆயிரத்து 939 பேர் விண்ணப்ப பதிவு செய்துள்ளனர். இதில் 51 ஆயிரத்து 857 பேர் விண்ணப்பக் கட்டணத்தையும், 24 ஆயிரத்து 843 பேர் சான்றிதழ் பதிவேற்றமும் செய்துள்ளனர். அதேபோல் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 151 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில், 89 ஆயிரத்து 637 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தி உள்ளனர்.