சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: ஆளுநர் மாளிகையில், அய்யா வைகுண்டரின் 192ஆவது பிறந்த நாள் விழாவில் ஆளுநர் ரவி பேசும் போது, சனாதன தர்மத்தைக் காக்கவே அய்யா வைகுண்டர் தோன்றினார். ராபர்ட் கால்டுவெல், ஜி.யு. போப் போன்றவர்கள் மதமாற்றத்துக்காகவே பிரிட்டிஷ் அரசால் நியமிக்கப்பட்டவர்கள். கால்டுவெல் பள்ளிப்படிப்பைக் கூட முடிக்காதவர். திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது என்று குறிப்பிட்டுள்ளர். தமிழ்மொழி மிகச்சிறந்த செவ்வியல்மொழி எனவும், தமிழ், வடமொழியின் துணையின்றித் தனித்து இயங்கும் ஆற்றல் உடையது எனவும் அழுத்தம் திருத்தமாகச் சான்று காட்டி நிறுவியவர் ராபர்ட் கால்டுவெல். வழக்கிழந்து போன வடமொழியை புறந்தள்ளிய ராபர்ட் கால்டுவெல் குறித்து சனாதன கும்பல் தொடர்ந்து பரப்பி வரும் அவதூறுகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தன் பங்கிற்கு தூக்கிக் கொண்டு திரிகிறார். சாதி சமய வேறுபாடுகள் இல்லாமல் அனைவரும் சமம் என்ற கோட்பாட்டை வலியுறுத்திய, சனாதனத்தின் எதிரியாக திகழ்ந்த அய்யா வைகுண்டரை சனாதனத்தின் காவலர் என்று ஆளுநர் உளறிக் கொட்டி இருக்கிறார். இந்துத்துவ கோட்பாட்டுக்கு ஆதரவாக ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரகர் போல ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து செயல்பட்டு வருவது கடுமையான கண்டனத்துக்குரியது.