சென்னை: அயோத்திதாசப் பண்டிதருக்கு மணிமண்டபம் அமைத்து திறப்பு விழா செய்துள்ள தமிழ்நாடு அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது முகநூல் பக்கத்தில் கூறியதாவது, சாதிய அடுக்கு முறை சமூகத்தை மாற்றியமைக்கும் முயற்சியில் ஈடுபட்ட தலைசிறந்த சிந்தனையாளர்களில் அயோத்திதாச பண்டிதர் குறிப்பிடத் தக்கவர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்திய காலத்தில் தொடங்கி, இருபதாம் நூற்றாண்டு தொடக்கம் வரை, பௌத்த சமய வழியில் தீண்டாமைக்கு எதிரான சிந்தனைகளை வளர்த்தெடுத்து, சுயமரியாதை, சமதர்ம கருத்துக்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். ஏடுகள் தொடங்கி வாசிப்பு வழி பரப்புரை தளம் அமைத்தவர். பன்முகத் திறன் கொண்ட அறிஞர் அயோத்திதாசர் பண்டிதர் அவர்களுக்கு, திருவுருவச் சிலையுடன் நினைவு மண்டபம் அமைத்து, திறப்பு விழா செய்துள்ள தமிழ்நாடு அரசுக்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு நன்றி, பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது என கூறியுள்ளார்.