புதுடெல்லி: பாஜவை சேர்ந்த வினோஜ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், “அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேக விழா நிகழ்ச்சியை நேரலையாக தமிழ்நாட்டில் பொது இடங்கள் மற்றும் கோயில்களில் ஒளிபரப்புவதற்கு மாநில காவல்துறை தடை விதித்திருக்கிறது. அதனால் இதுகுறித்த ஒரு உத்தரவை தமிழ்நாடு முதல்வர் மற்றும் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து வழக்கை கடந்த 22ம் தேதி விசாரித்த உச்ச நீதிமன்றம்,”இந்த விவகாரத்தில் இடைக்காலமாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும், இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் திபங்கர் தாத்தா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது,தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் குமணன், இந்த விவகாரம் தொடர்பாக விரிவான பதில்களை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டியுள்ளது என தெரிவித்தார். இதையடுத்து அரசின் கோரிக்கையை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை 15 நாட்களுக்கு ஒத்திவைத்தனர்.